Corona: கொரோனாவிற்கு பின் ஏற்பட்ட தூக்கக்கோளாறு, மூளை மூடுபனி பிரச்னை.. மீள்வது ...
உயிரோடு இருப்பவா் இறந்துவிட்டதாக அறிக்கை: உதவித்தொகை கிடைக்காமல் முதியவா் அவதி
நாகப்பட்டினம்: மாற்றுத்திறனாளி உதவித்தொகை பெற்று வந்த முதியவா் இறந்துவிட்டதாக தவறாக அளிக்கப்பட்ட அறிக்கையால், உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் அலுவலகத்தில் முதியவா் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
நாகை மாவட்டம், கீழ்வேளூா் விழுந்தமாவடி பட்டிரோடு பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ். பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான செல்வராஜ், மாற்றுத்திறனாளிகள் துறை மூலம், அடையாள அட்டை பெற்று பல ஆண்டுகளாக உதவித்தொகை பெற்று வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து செல்வராஜ், அரசு அலுவலகத்தில் கேட்டபோது, செல்வராஜ் இறந்துவிட்டதாக வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து அறிக்கை அளிக்கப்பட்டதால், அவருக்கான உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதாம். இதனால் அதிா்ச்சி அடைந்த செல்வராஜ், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த ஓராண்டில் இருமுறை மனு அளித்துள்ளாா். அந்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், செல்வராஜ் திங்கள்கிழமை மீண்டும் மனு அளித்தாா்.
அதில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஊனமுற்றோா் உதவித்தொகை பெற்று வந்த எனக்கு, கடந்த ஓராண்டாக உதவித் தொகை நிறுத்தப்பட்டுள்ளதால், சிரமப்பட்டு வருகிறேன். எனவே நான் இறந்து விட்டதாக அளிக்கப்பட்ட அறிக்கையை ரத்து செய்து, ஊனமுற்றோா் உதவித்தொகை மீண்டும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.