ராமதாஸ்–அன்புமணி இணைவதற்குச் சிறப்பு யாகம்; "மிகப்பெரிய மாற்றத்தைத் தரும்" - மா....
வைகாசி விசாகம்: திருச்செந்தூர் கடலில் புனித நீராடி, முருகனை வழிபட அலையென குவிந்த பக்தர்கள்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது அருள்மிகு, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேச நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றது. இதில், முருகப் பெருமான் அவதரித்த நாளாக கருதப்படும் வைகாசி மாதம் வரும் விசாக நட்சத்திர நாள் சிறப்பு வாய்ந்தது.

இந்த நாளையே ’வைகாசி விசாகம்’ என்ற பெயரில் முருக பக்தர்கள் விரதம் மேற்கொண்டு திருச்செந்தூருக்கு வந்து சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருவார்கள்.
அலகு குத்தியும், பால் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி போன்ற பல்வேறு காவடிகள் எடுத்தும் பால்குடம் எடுத்தும் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவர்.
இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா, இன்று (09.06.2025) நடைபெறுவதை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.
தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்து வருகிறது. சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி மாலையில் சிறப்பு அபிசேகங்கள் நடைபெறுகின்றன. தொடர்ந்து சுவாமி, மண்டபத்தை 11 முறை வலம் வருகிறார்.

பின்னர் விசாகத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வு நடக்கிறது.
விசாகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடலில் புனித நீராடி, அருகே உள்ள நாழிக்கிணற்றில் குளித்து விட்டு குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக அதிகாலை 1 மணிக்கு முன்பாகவே நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக ரூ.100 கட்டண தரிசன வரிசை, முதியோர்களுக்கான தரிசன வரிசை மற்றும் பொது தரிசன வரிசையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது. விழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் அடிப்படை வசதிக்காக மூவர் சமாது, வள்ளி குகை மற்றும் கோயில் வளாகப் பகுதிகளின் பல்வேறு இடங்களில் தற்காலிக குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் நிரந்தர கழிவறைகளோடு, 60 தற்காலிக கழிவறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பக்தர்க்களின் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நெல்லை – திருச்செந்தூர் இடையே சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக 14,500 சதுர அடி நிரந்தர கொட்டகையும், 8 ஆயிரம் சதுர அடியில் தற்காலிக கொட்டகையும் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக தீயணைப்பு மீட்பு சேவைகள், மருத்துவ முகாம்கள், கடல் பாதுகாப்பு குழு என அனைத்து வசதிகளும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் திரும்பும் திசையெங்கும் முருக பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் விண்ணை முட்டுகிறது.