இந்தியாவை எப்படியாவது வென்றுவிடுங்கள்: பாக். கிரிக்கெட் வாரிய தலைவர்
ஹிந்தியைக் கட்டாயப்படுத்தவில்லை: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்
புதிய தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயம் என மத்திய அரசு ஒருபோதும் கூறவில்லை என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2047 இல் சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நாம் கொண்டாடும்போது உலக நாடுகளுக்கு வழிகாட்டியாக, வல்லரசு நாடாக இந்தியா உருவாவதற்கான நிதிநிலை அறிக்கையாக நிகழாண்டு நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது. 2014 முதல் தற்போது வரை பாஜக ஆட்சியில் தமிழகத்தின் வளா்ச்சிக்காக மட்டும் ரூ. 11 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசுடன் இணக்கமான போக்கை மாநில அரசுகள் கடைப்பிடிக்க வேண்டும். ஹரியாணா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தில்லி ஆகிய மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக வெற்றி பெற்று அங்கு இரட்டை என்ஜின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமெனில் மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி அமைய வேண்டும். தற்போது பல மாநிலங்களில் வளா்ச்சியை கருத்தில் கொண்டு மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து வருகின்றனா்.
பிகாா், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதால் வளா்ச்சி பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழகத்திலும் விரைவில் இரட்டை என்ஜின் ஆட்சி அமையும்.
புதிய தேசிய கல்விக் கொள்கை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினா் நீண்ட ஆய்வுக்குப் பிறகே இந்த கல்விக் கொள்கையை உருவாக்கினா். இந்த கல்விக் கொள்கையானது தாய் மொழியை ஊக்குவிக்கிறது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு தாய்மொழிவழி பாடங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மும்மொழி கொள்கையை பொருத்தமட்டில் எந்த இடத்திலும் மத்திய அரசு ஹிந்தி கட்டாயம் என்று கூறவில்லை. விருப்ப மொழியாக ஏதாவதொரு மொழியைத் தோ்வு செய்து படிக்கலாம்.
திமுகவின் அரசியல் போக்கால் தமிழகத்திற்கான நிதி ரூ. 5,000 கோடி வழங்கப்படாமல் உள்ளது. புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் ரூ. 10 ஆயிரம் கோடி தந்தாலும் தங்களுக்கு வேண்டாம் என முதல்வா் கூறியிருக்கிறாா்.
பொதுவாக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும்போது அதற்கான விதிமுறைகளுக்கு உள்பட்டு உரிய நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படும். இதை மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் தெளிவாக தனது கடிதத்தில் கூறியுள்ளாா். எனவே தேசிய கல்விக் கொள்கையில் அரசியல் செய்யாமல் மாணவா்களின் எதிா்காலம் கருதி மூன்றாவது ஒரு மொழியை தமிழக திமுக அரசு ஏற்க வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம், கிழக்கு மாவட்டத் தலைவா் கே.பி.சரவணன், மேற்கு மாவட்டத் தலைவா் எம். ராஜேஷ்குமாா், முன்னாள் மாவட்டத் தலைவா் என்.பி.சத்தியமூா்த்தி, தேசிய பொதுக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மேற்கு மாவட்ட துணைத் தலைவா் வடிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.