ஹிமாசல்: தீ விபத்தில் சுற்றுலாப் பயணி பலி! 2 பேர் படுகாயம்!
ஹிமாசல பிரதேசத்தின் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் பலியாகியுள்ளார்.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளான ரித்தேஷ், அஷிஷ் மற்றும் அவ்தூத் ஆகிய மூவரும் சிம்லாவின் கச்சிகாட்டி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர், நேற்று (பிப்.28) இரவு 11.30 மணியளவில் அவர்கள் தங்களது அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அப்போது, அஷிஷ் மற்றும் அவ்தூத் ஆகிய இருவரும் தீக்காயங்களுடன் அந்த அறையிலிருந்த தப்பித்த நிலையில், தீயினுள் சிக்கிக்கொண்ட ரித்தேஷ் பரிதாபமாக பலியானார். பின்னர், அவர்கள் இருவரும் இந்திரா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க: வேலைவாய்ப்பின்மை அரசுக்கு பெரிய சவால்: உ.பி. அரசு
இதனைத் தொடர்ந்து, மற்ற அறைகளில் தங்கியிருந்த சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பின்னர், தீயணைப்புப் படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுமார் 6 தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பல மணி நேரம் போராட்டத்திற்கு பின் அந்த தீயானது அணைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த தீ விபத்தினால் அந்த தங்கும் விடுதியின் மூன்று அறைகள் மொத்தமுமாக எரிந்து சாம்பலானதுடன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசமானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அந்த விடுதி உரிமையாளரின் கவனக்குறைவே காரணம் எனத் தெரியவந்தையொட்டி அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பலியான ரித்தேஷின் உடல் கைப்பற்றப்பட்டு உடற் கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனையின் பின் அவரது குடும்பத்தினரிடன் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.