BB Tamil 9: ``அரோரா இருக்க இடத்துலதான் துஷார் இருப்பான்" - BB அப்சரா பேட்டி | Ex...
"10 கிலோ கருப்பட்டிக்கு 14 மணி நேரம் உழைப்பு தேவை" - கருப்பட்டி தொழிலாளியின் பகிர்வு
வெயிலின் சூட்டில் வியர்வை சொட்டியபடி, பதநீரின் சாற்றைக் காய்ச்சி, கருப்பட்டி உருவாகும் வரை அவர்களின் கைகள் ஓயாது வேலை செய்கின்றன.
நாம் சுவைக்கும் அந்தக் கருப்பட்டியின் இனிப்புக்கு பின்னால் பலரின், போராட்டங்களும், கடின உழைப்பும் இருக்கின்றன.

ஒரு மாலை வேளையில் இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடிக்கு அருகில் அமைந்துள்ள N. வெள்ளப்பட்டி கிராமத்தில் உள்ள பனையேறி சு.ஆறுமுகத்திடம் இந்தக் கருப்பட்டி தொழில் குறித்து உரையாடினோம்.
கருப்பட்டி தொழில் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், " இந்தத் தொழிலை எங்கள் தாத்தா காலத்திலிருந்து செய்து வருகிறோம்.
எங்களது முன்னோர்கள் முதன்முதலில் தென்கோடி மாவட்டங்களான கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இத்தொழிலைச் செய்தார்கள்.
ஆனால், தற்போது இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் சேலம் மாவட்டங்களில் இந்தப் பனைத் தொழிலைச் செய்து வருகிறோம். மக்களுக்கு நல்ல சத்தான உணவுப் பொருளைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
அப்படி கொடுக்கும்போது அது எங்களுக்கு மன நிம்மதியைக் கொடுக்கிறது.
எங்கள் காலத்திற்குப் பிறகு, எங்கள் குழந்தைகள் மற்றும் இளைய தலைமுறையினர் இத்தொழிலைச் செய்வதில் விருப்பம் காட்டுவதில்லை. ஏனென்றால், இத்தொழிலில் அவ்வளவு சிரமங்கள் உள்ளன.

இந்தக் கருப்பட்டியை உற்பத்தி செய்ய ஒரு மனிதன் தன் குடும்பத்துடன் உழைக்க வேண்டும்.
தன் வேலையை அதிகாலை 3 மணிக்குத் தொடங்கி காலை 8 மணி வரை ஒவ்வொரு பனையிலும் ஏறி இறங்கி பதநீர் இறக்க வேண்டும்.
பின்னர், அவ்வாறு இறக்கிய பதநீரை என் மனைவியின் துணையுடன் காய்ச்சி, பின் அதனைக் கூல் சாறு பக்குவத்திற்குக் கொண்டுவந்து, தேங்காய் சிரட்டையில் ஊற்றி கருப்பட்டியாக மாற்றியதும் அதனைப் பக்குவப்படுத்த வேண்டும்.
பின்னர், காலையில் ஏறிய அனைத்து பனைகளிலும் மதியம் ஏறி பனம்பாலையைச் சீவிவிட வேண்டும்.
மீண்டும் மாலையில் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு மூன்று முறை இந்தப் பணிகளைச் செய்யவேண்டும்.
ஒரு கருப்பட்டி தயாரிக்க எவ்வளவு நேரம் என்று சொல்லமுடியாது.
ஒரு நேரம் அண்டாவில் பதநீர் ஊற்றி, அதனை வற்றவிட்டு, பின்பு அதனைக் கருப்பட்டியாக எடுத்தால், சுமார் 5 கிலோ வரை உற்பத்தி கிடைக்கும்.

மொத்தம் ஒரு தொழிலாளி சுமார் 10 கிலோ கருப்பட்டி தயாரிக்க, ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைப்பு தேவை.
கருப்பட்டியை உற்பத்தி செய்த பின்பு, வியாபாரிகள் அவர்களின் சங்கங்களின் மூலம் விலை நிர்ணயம் செய்து, அதனடிப்படையில் எங்களிடம் வாங்கிக் கொள்கிறார்கள்.
விலை நிர்ணயம் வாரம் ஒருமுறை மாறுபடும். வியாபாரிகள் இல்லாமல் நேரடியாகக் கருப்பட்டியை விற்பனை செய்யமுடியும்.
ஆனால், தொழில் இல்லாத 6 மாதங்களில் குடும்பச் செலவிற்காக அந்த வியாபாரிகளிடம் பணம் பெற்று குடும்பத்தை நடத்த வேண்டியிருப்பதால், அவர்களை விட்டால் எங்களுக்கு வேறு வழி இல்லை.
இத்தொழிலைச் செய்வதற்கு உகந்த காலம் வெயில் காலம் மட்டுமே. இந்தக் காலகட்டங்களில் மழை பெய்தால், தொழில் பாதிப்படையும்.
இத்தொழிலின் மூலம் எங்களுக்கு வருமானம் போதுமானதாக இல்லை. ஏனென்றால், வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே இத்தொழில் இருக்கும்.
மீதமுள்ள 6 மாதக் காலம் வீட்டில் தான் இருப்போம். அந்தக் காலகட்டங்களில் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் என்றால், அதற்கு உடல் ஒத்துழைப்பு தராது.

நாங்கள் பட்ட கஷ்டங்களை எங்கள் பிள்ளைகள் பட வேண்டாம் என்று நாங்களே அவர்களை நல்ல முறையில் படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப விரும்புகிறோம்.
அதனால், எங்களுக்குப் பிறகு இத்தொழிலைச் செய்ய ஆள் இல்லை. எங்களுக்கு உரிய முறையில் அரசு எந்தவொரு கடனும், மானியமும் வழங்குவதில்லை.
கருப்பட்டி தொழிலாளர்களுக்கு கடன், மானியங்கள், மாற்று வாழ்வாதாரம், நியாயமான விலை நிர்ணயம், தொழில்நுட்ப ஆதரவு, மற்றும் பாரம்பரிய தொழிலை பாதுகாக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி, அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார்.