அமெரிக்காவில் இறக்குமதியாகும் சூரிய சக்தி மின் உபகரணங்களுக்கு 3,521% வரி விதிப்ப...
100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப் பணி நாள்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு நிகழாண்டில் 12 கோடி மனித நாள் வேலைகளும், அதற்கான நிதியை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு சராசரியாக 50 நாள்களாவது வேலை வழங்க வேண்டும் என்றால் குறைந்தது 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படும். ஆனால், தற்போது அதில் சுமாா் நான்கில் ஒரு பங்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் போதுமானதல்ல.
தமிழகத்தில் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் 100 நாள் வேலைத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் பணிகளை நம்பியே உள்ளது. ஆகையால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் குடும்பங்களுக்கு, குறைந்தது 50 நாள்கள் வேலை வழங்க 43 கோடி மனித நாள்கள் வேலை தேவைப்படுவதால், அந்த அளவுக்கு வேலை நாள்களை தமிழகத்துக்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும். மேலும், 2024-25-ஆம் நிதியாண்டில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ. 3,850 கோடியை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.