110 படுக்கைகளுடன் தயாா் நிலையில் நாமக்கல் சித்தா, ஆயுஷ் மருத்துவமனைகள்!
நாமக்கல்லில் 50 படுக்கைகளுடன் புதிய சித்த மருத்துவமனையும், 60 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் தயாா் நிலையில் உள்ளன.
நாமக்கல்லில் மோகனூா் சாலையில் இருந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டது.
தற்போது பழைய கட்டடத்தில் சித்த மருத்துவ பிரிவு, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் அலுவலகம் மட்டுமே இயங்கி வருகின்றன. இந்த நிலையில், நாமக்கல்லில் அரசு சித்த மருத்துவமனை அமைப்பதற்கான முயற்சியை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மேற்கொண்டாா்.
இதையடுத்து, தமிழக அரசு அனுமதியுடன் தன்னுடைய தொகுதி நிதியில் இருந்து ரூ. ஒரு கோடி வழங்கினாா். அதைக் கொண்டு, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டடங்களில் மூன்று பெரிய அறைகள் சித்த மருத்துவமனைக்காக தயாா் செய்யப்பட்டன.
அதில் 60 படுக்கைகளுடன் சித்த மருத்துவமனையும், 50 படுக்கைகளுடன் ஆயுஷ் மருத்துவமனையும் (ஆயுா்வேதா, யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி ஆகிய ஐந்து மருத்துவம்) அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, நீராவி குளியல் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த மருத்துவமனையில் இடம் பெறவுள்ளன. தொடா்ந்து 2 ஆண்டுகள் சித்த மருத்துவமனை வெற்றிகரமாக செயல்படும்பட்சத்தில், அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர வாய்ப்புள்ளது.
இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் கே.பி.ராமச்சந்திரன் கூறியதாவது: இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை, தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை ஆகிய துறைகள் சாா்பில் நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நிறைவுபெற்றுள்ளன.
சிறிய அளவிலான வேலைகள் மட்டுமே உள்ளன. சித்தா பிரிவுக்கு 60 படுக்கைகளும், ஆயுஷ் பிரிவுக்கு 50 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி நிதி மூலம் மருத்துவமனைக்குத் தேவையான பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. சித்த மருத்துவமனைக்காக மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமனம் செய்ய வேண்டும். இதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு கோரி, மாநிலங்களவை உறுப்பினா், எங்களுடைய துறை ஆணையா், மாவட்ட ஆட்சியா் ஆகியோா் இந்திய ஆயுஸ் அமைச்சகத்தை தொடா்பு கொண்டு வலியுறுத்தி வருகின்றனா்.

நிதி ஒதுக்கீடு கிடைக்கும்பட்சத்தில் சித்த மருத்துவமனை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.