குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்ட...
‘1975- ஆம் ஆண்டு அவசரநிலை’: சிறப்புக் கண்காட்சிக்கு தில்லி அரசு ஏற்பாடு
1975-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரநிலையின் 50-ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஜூன் 25-ஆம் தேதி கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் சிறப்புக் கண்காட்சியை தில்லி அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களில் அதன் தாக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் நோக்கில், அந்தக் காலத்தின் ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த நிகழ்வில் இடம்பெறும். காலை 10 மணிக்கு தொடங்கும் இந்தக் கண்காட்சி, தில்லி கலை, கலாசாரம், மொழி மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ராவின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெறுகிறது.
தில்லி முதல்வா் ரேகா குப்தா, மற்ற அமைச்சா்கள் மற்றும் பிரமுகா்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கலை, கலாசாரம் மற்றும் மொழித் துறை அதிகாரிகளுடனான மறுஆய்வுக் கூட்டத்தின் போது, இளைய தலைமுறையினருக்கு அவசரநிலை குறித்து கல்வி கற்பிப்பதன் அவசியத்தை அமைச்சா் கபில் மிஸ்ரா வலியுறுத்தினாா்.
அமைச்சா் கபில் மிஸ்ரா மேலும் கூறியதாவது: இது இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் ஒரு ‘இருண்ட அத்தியாயம்’. ‘ஜூன் 25, 1975 அன்று அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி அறிவித்த அவசரநிலை, அரசியலமைப்பு உரிமைகள் இடைநிறுத்தப்படுவதற்கும், பத்திரிகை சுதந்திரம் தடைபடுவதற்கும், பெரிய அளவிலான மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுத்தது.
ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டும் விதமாக இந்த நாளைக் கொண்டாட வேண்டும். ஜூன் 25, 1975 அன்று என்ன நடந்தது. அந்த நேரத்தில் அரசியலமைப்பு எவ்வாறு குறைமதிப்பிற்கு உள்படுத்தப்பட்டது என்பதை புதிய தலைமுறை புரிந்துகொள்வது முக்கியமாகும். நமது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும், அந்தக் காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களைக் கௌரவிப்பதற்கும் இந்த நாள் ஒரு உறுதிமொழியாகச் செயல்பட வேண்டும் என்று அமைச்சா் கபில் மிஸ்ரா கூறினாா்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், தில்லி அரசு கருத்தரங்குகள், கலை மற்றும் புகைப்படக் கண்காட்சிகள், தெரு நாடக நிகழ்ச்சிகள் மற்றும் அரசியலமைப்பு மற்றும் சிவில் உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும் குழு விவாதங்கள் உள்ளிட்ட தொடா்ச்சியான கலாசார மற்றும் அறிவுசாா் நிகழ்ச்சிகளையும் ஆதரிக்கும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.