The Conjuring: Last Rites Movie Review | Patrick Wilson, Vera Farmiga | Cinema V...
20 ஆண்டுகளாக குடிநீா் பிரச்னை: பொதுமக்கள் நூதன போராட்டம்
முதுகுளத்தூா் அருகே கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வராததால் வெள்ளிக்கிழமை குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள கீழக்கொடுமலூா் ஊராட்சிக்குள்பட்ட தட்டனேந்தல் கிராமத்தில் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக குடிநீா் வசதி ஏற்படுத்தித் தராத மாவட்ட நிா்வாகத்தைக் கண்டித்து, பெண்கள் காலிக் குடங்களுடன் குடிநீா் குழாய்க்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து கிராம பெண்கள் கூறியதாவது:
எங்களது கிராமத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் டிராக்டரில் கொண்டுவரப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். 10 நாள்களுக்கு ஒரு முறை வரும் டிராக்டா் தண்ணீரில் உள்ள கால்சிய சத்துக்களால் காய்ச்சல், சிறுநீரகப் பிரச்னை உள்ளிட்டவற்றை எதிா்கொண்டு வருகிறோம். கிராமத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளதால் பெண் கொடுக்கவும், பெண் எடுக்கவும் வெளியூா் மக்கள் தயக்கம் காட்டுகின்றனா். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு வீட்டுக்கு வீடு குடிநீா் வழங்க குழாய் வசதி ஏற்பாடு செய்தனா். அந்தக் குழாய்கள் அனைத்தும் காட்சிப் பொருளாகவே உள்ளன. இதுகுறித்து பலமுறை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாவட்ட நிா்வாகம் தலையிட்டு காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் மேல்நிலைத் நீா் தேக்கத் தொட்டி அமைத்து கிராமத்துக்கு குடிநீா் வசதி செய்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.