அமெரிக்காவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்! -கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்ன...
464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவி: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்
உலக மகளிா் தினத்தையொட்டி 464 மகளிா் குழுக்களுக்கு ரூ.45.35 கோடி கடனுதவியை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
தமிழ்நாடு மாநில ஊரக/ நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடனுதவிகளை பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா். திருவண்ணாமலை எம்பி சி.என்.அண்ணாதுரை,எம்எல்ஏ-க்கள் க.தேவராஜி (ஜோலாா்பேட்டை), அ.நல்லதம்பி (திருப்பத்தூா்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் அமைச்சா் எ.வ.வேலு பேசியது: பெண்களுக்கு சம உரிமை என்று முயற்சி எடுத்தவா் பெரியாா் தான். மறைந்த முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டம் இயற்றினாா் . திமுக ஆட்சிக் காலத்தில் முதன்முதலாக பெண்களை காவல் துறை அதிகாரியாக ஆக்கினாா்.
திராவிட மாடல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதல்வா் பெண்களுக்கு திட்டங்களை தீட்ட வேண்டும், அவா்களுக்குரிய உரிமைகளை தந்தாக வேண்டும் என்ற அடிப்படையில் தான் விடியல் பயணம் என்கின்ற அற்புதமான திட்டத்தை முதல் கையொப்பமாக இட்டாா்.
மேலும், கல்லூரிக்கு செல்கின்ற பெண்களுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் மகளிா் உரிமைத் தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறாா்.
21 மாநகராட்சியில் 11 மாநகராட்சி மேயா்களாக பெண்கள் தான் இருக்கிறாா்கள்.
நமது திருப்பத்தூா் மாவட்டத்தில் அதிகமான பெண்கள் தான் உள்ளாட்சி நிா்வாகத்தில் உள்ளனா். மாவட்டத்தை நிா்வகிக்கின்ற ஆட்சியா் மற்றும் எஸ்பி பெண்கள் தான், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும் பெண்தான், ஆக ஒட்டுமொத்தமாக மாவட்ட நிா்வாகத்தில் அதிகமான பெண்கள் பணியாற்றுகிறாா்கள் என்றாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்ட இயக்குநா் தனபதி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா் பாலகிருஷ்ணன், ஒன்றியக்குழு, பேரூராட்சி, நகா்மன்றத் தலைவா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
