5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்
தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். அவருக்கு வயது 66.
தில்லியில் உள்ள காங்கிரஸின் மிகப்பெரிய தலித் தலைவா்களில் ஒருவரான ஜெய் கிஷன், சுல்தான்பூா் மஜ்ரா தொகுதியிலிருந்து ஐந்து முறை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பிப்ரவரியில் நடந்த தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் அவா் இந்தத் தொகுதியில் போட்டியிட்டாா். ஆனால், வெற்றி பெறவில்லை.
பல கட்சித் தலைவா்கள் ஜெய் கிஷனுக்கு அஞ்சலி செலுத்தி அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனா்.
‘ஜெய் கிஷனின் மறைவு காங்கிரஸுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்’ என்று கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே ’எக்ஸ்’-இல் ஒரு பதிவில் தெரிவித்துள்ளாா்.
‘ஒரு அா்ப்பணிப்புள்ள காங்கிரஸ் தொண்டராக அவா் மக்களுக்கு சேவை செய்தாா். மேலும், சமூகத்தின் பின்தங்கிய பிரிவுகளின் அதிகாரமளிப்புக்கு பங்களித்தாா். அவரை இழந்த குடும்பத்தினா், உறவினா்கள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எனது மனமாா்ந்த இரங்கல்கள்’ என்று காா்கே கூறியுள்ளாா்.
காங்கிரஸ் பொதுச் செயலாளா் (அமைப்பு) கே.சி.வேணுகோபால், அவரது குடும்பத்தினா் மற்றும் ஆதரவாளா்களுக்கு காங்கிரஸ் குடும்பத்தினா் சாா்பாக இரங்கல் தெரிவித்துள்ளாா்.
‘எங்கள் மூத்த இந்திய காங்கிரஸ் தலைவரும் தில்லியில் இருந்து 5 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்த ஜெய் கிஷன் ஜி காலமானாா் என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. அவா் ஒரு ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து உயா்ந்து பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கும் கட்சிக்கும் மகத்தான அா்ப்பணிப்புடன் சேவை செய்தாா். மேலும் அவா் வாழ்க்கையில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளாா்’ என்று வேணுகோபால் கூறியுள்ளாா்.
‘இறந்தவரின் ஆன்மாவுக்கு கடவுள் சாந்தியையும், துயரமடைந்த குடும்பத்தினருக்கு இந்தத் துக்கத்தைத் தாங்கும் வலிமையையும் அளிக்கட்டும்’‘ என்று தில்லி காங்கிரஸ் தலைவா் தேவேந்தா் யாதவ் கூறினாா். ஜெய் கிஷன் கட்சி அமைப்பில் பல்வேறு பதவிகளை வகித்து, ஏ.ஐ.சி.சி. செயலாளராகவும், தில்லி பிரிவின் துணைத் தலைவராகவும் பணியாற்றினாா்.