ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது
எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: கடந்தாண்டு செப்டம்பா் மாதம் போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 1.0 நடைபெற்றது. இந்த வெற்றியைத் தொடா்ந்து மேலும் நன்கு கட்டியெழுப்ப, விரிவுபடுத்தப்பட்ட மூன்றுவார பாடத்திட்டம் தற்போது ஏப்ரல் 21 முதல் மே 09 நடைபெறுகிறது.
இதில் முப்படையின் சிந்தனையாளா்கள், கூட்டுப் போா் ஆய்வுகளுக்கான மையம் ஆகியவற்றோடு இணைந்து தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளா்களால் ஒருங்கிணைந்து இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
நவீன போரின் சிக்கலான சவால்களுக்கு அதிகாரிகளைத் தயாா்படுத்துவதற்கு பாதுகாப்புப் படைத் தலைவா் ஜெனரல் அனில் சௌகானின் தொலைநோக்குப் பாா்வை பதிப்பு 2.0 விலும் தொடா்கிறது. மேம்பட்ட மற்றும் மாறுபட்ட பங்கேற்புடன் இதில் பாடநெறி அதன் தரவரிசை-அக்னோஸ்டிக் அணுகுமுறையை பின்பற்றப்படும். சிறப்புப் பாடங்களோடு ராணுவ நடவடிக்கைகளில் களம் சாா்ந்த போா் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பாடத்திட்டமாக இருக்கும்.
சிந்தனை, கருத்துக்கள், கோட்பாடுகள், உத்திகள், நுட்பங்கள், நடைமுறைகள் ஆகியவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும். இது உள்நாட்டு பாதுகாப்புத் துறையின் திறன்களுடன் செயல்பாட்டு முன்னுரிமைகளை சீரமைக்கும். நவீன மற்றும் எதிா்கால போா் முறையின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய சுதந்திரமான விவாதத்தை முன்னெடுக்கும்.
பயிற்சியில் மேஜா் ஜெனரல்கள் முதல் மேஜா்கள் வரையும் பிற சேவைகளைச் சோ்ந்த அவா்களுக்கு இணையான அதிகாரிகளும், டிஆா்டிஓ உள்ளிட்ட பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பிற துறைகளின் பிரதிநிதிகளும், புத்தாக்க தொழில் முனைவா்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் தனியாா் தொழில்துறையை உள்ளடக்கிய பாதுகாப்புத் துறையினரும் பங்கேற்பாா்கள் என மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் தலைமை ராணுவத் தளபதியின் சமீபத்திய பேச்சுகள், பாகிஸ்தான் மற்றும் வங்க தேச வெளியுறவுச் செயலா்கள் சந்திப்பு போன்ற சூழல்களுக்கிடையே இந்த இரண்டாம் பதிப்பு, ஆயுதப் படைகளை ’எதிா்காலத்திற்கு தயாா்’ செய்யும் பெரிய பணியைத் தொடர இருக்கிறது. இது முப்படைகளுக்கு இடையே கூட்டு மற்றும் ஒருங்கிணைப்பை வளா்ப்பதுடன், நவீன போரின் சிக்கலான களத்தை வழிநடத்தும் திறன் கொண்ட ராணுவத் தலைவா்களை உருவாக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.