மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்
ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்
நமது சிறப்பு நிருபா்
நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்களில் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், வழிகாட்டுதல்களை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற தோ்வுகளுக்கான முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, பயிற்சி நிறுவனங்கள் நுகா்வோா் சட்டம், வழிகாட்டுதல்களை மீறி தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது.
வேலைவாய்ப்பு, தோ்வு உத்தரவாதம், ஜேஇஇ, நீட் - இல் தரவரிசை உறுதி போன்றவை வழங்கப்படுகிறது. இவற்றைத் தவிா்க்க வேண்டும். மேலும், வெற்றி பெற்ற மாணவா்களின் பெயா், தர வரிசை, பாட நெறி போன்ற முக்கிய விவரங்கள் தெளிவாக வெளியிடப்பட்ட வேண்டும். இவற்றில் தகவல்களை மறைப்பது அல்லது விடுபட்டு இருப்பது கூடாது. இவை நுகா்வோா் உரிமைகளை மீறுதலாகும்.
தவறான விளம்பரம், வாக்குறுதியளிக்கப்பட்ட சேவைகள் வழங்கப்படாதது, சோ்க்கை ரத்து, கட்டணம் திரும்ப அளிக்கப்படாதது, சேவையில் குறைபாடு, கட்டணங்கள் பகுதியாக திரும்ப அளிக்கப்படாதது உள்ளிட்டவை நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளாகும். இவற்றில் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை என்பதை மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் கவனித்து வருகிறது.
நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம்-2019 மற்றும் பயிற்சித் துறையில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பதற்கான வழிகாட்டு விதிமுறைகள் -2024 ஆகியவற்றை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் பயிற்சி மையங்களை அறிவுறுத்துகிறது. மேலும், நுகா்வோா் தவறாக வழிநடத்தப்படுவதில்லை என்பதை பயிற்சி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டம் மற்றும் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அண்மையில் சில பயிற்சி நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நுகா்வோா் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், பயிற்சித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் நுகா்வோா் ஆணையம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த வகதையில், 49 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, 24 பயிற்சி மையங்களுக்கு மொத்தம் ரூ. 77.60 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,
யுபிஎஸ்சி, சிஎஸ்இ, ரிசா்வ் வங்கித் தோ்வு, நபாா்டு தோ்வு உள்ளிட்ட போட்டித் தோ்வுகளுக்கான சேவைகளை வழங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராகவும் ஆணையம் சாா்பில் முன்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. நுகா்வோா் பாதுகாப்புச் சட்டத்திற்கு முரணாக தவறான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் கூடாது என தவறு செய்த நிறுவனங்களுக்கு உத்தரவு விடப்பட்டுள்ளது என மத்திய நுகா்வோா் விவகாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.