US: `வரி யுத்தத்துக்கு தயாராகும் டொனல்டு ட்ரம்ப்' -எப்படி எதிர்கொள்ளப்போகிறது இந...
500 மீட்டரில் 200 கடைகள்... எப்போதும் பரபரப்பாக இயங்கும் திருவாரூர் பழைய தஞ்சை சாலை.. ஒரு விசிட்!
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து கொஞ்சம் தூரம் நடந்தால் பழைய தஞ்சை சாலை. இந்த சாலையில் என்ன ஸ்பெஷல்?
பைக், கார், லாரி உள்ளிட்ட வாகனங்களின் ரிப்பேர், உதிரி பாகங்கள்ஆகியவற்றுக்குப் பிரபலமான இடம்தான் சென்னையிலுள்ள புதுப்பேட்டை. அதன் மினியேச்சர்தான் இந்த பழைய தஞ்சை சாலை. ஆம், 500 மீட்டர் தொலைவு உள்ள இந்த சாலையைச் சுற்றி 200 கடைகளுக்கும் மேல் உள்ளன.
நம் நாடு மனித வளம் நிறைந்த நாடாக இருப்பதால்தான் பொருளாதாரத்தில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. அந்த வகையில் பொருளாதாரத்தை மேம்படுத்த உழைக்கும் வர்கத்தின் அடையாளமாக தான் இந்த திருவாரூர் பழைய தஞ்சை சாலையை காண முடிகிறது.
ஏனெனில் இருசக்கரமான சைக்கிள் மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் கடையிலிருந்து நான்கு சக்கரமான காரிலிருந்து லாரி வரை அனைத்து கடைகளும் இந்த பழைய தஞ்சை சாலையில் அடங்கும். மனிதனின் வேலை பளுவை குறைக்க தான் இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டவை என்றாலும் கூட, இயந்திரத்தனமான மனிதர்களை அச்சாலையில் இரு புறங்களிலும் உள்ள கடைகளில் நம்மால் காண முடியும். அச்சாலை ஒரே இரைச்சலாக இருந்தாலும் கூட அந்த இரைச்சலைக்குப் பின்னால் அந்த தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களின் புன்னகையும் அர்ப்பணிப்பும் நம்மை ஏனோ புருவம் உயர்த்தி பார்க்கச் செய்யும் நிலையில் உள்ளதென்றால், ஒவ்வொருவரும் ஓய்வின்றி தான் எடுத்த பணியில் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செய்து வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தும் வண்ணமாக உள்ளதால் தான்! திருவாரூர் சுற்றுவட்டார பகுதி மக்களே தேடி வந்து தனது வாகன தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.
இது குறித்து அச்சாலையில் 38 ஆண்டுகாலமாக சைக்கிள் கடை நடத்தி வரும் அண்ணன் எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களிடம் இதுகுறித்து கதைத்தோம், "நான் கடை கட்டுன போது விரல் விட்டு எண்ணும் அளவுக்கு, பத்து பதினைந்து கடை தான் இருந்தது. மத்தபடி இந்த சாலையில வீடுங்க தான் அதிகம். அதுல என் கடை பத்தாவது கடை அப்பெல்லாம் சைக்கிளுக்கு தான் மவுசு அதிகம். எம்ஜிஆர் சைக்கிள் ஸ்டாண்ட் என்று சொன்னால், நான் சுத்துப்பட்டு மக்களுக்கு அம்புட்டு புகழ். என்னோட சைக்கிள் வந்தது பாதியுமா போனது பாதியுமா தான் இருக்கும். 1990-களில் பைபாஸ் ரோடு வந்ததுக்கு அப்பால தான் இந்த சாலையில கடைங்கி ஒண்ணு ஒண்ணா முளைக்க ஆரம்பிச்சுச்சு. இப்ப எண்ண முடியாதபடி ஒரே நெருக்கடியா மாறிடுச்சு." என்று கூறினார்.
அதே சாலையில் முதல் தலைமுறை லாரி மெக்கானிக்கான முஸ்தபா அவர்களிடம் இது குறித்து பேசினோம் " ப்ரோ நான் கடை செட் பண்ணி நாலு வருஷம் ஆகுது இந்த நாலு வருஷத்துல என்னோட தொழில் பண்றவங்க பத்துக்கும் மேற்பட்டவங்க இருக்காங்க. எங்க தொழில்ல போட்டி தான் இருக்குமே தவிர பொறாம இருந்ததில்லை. எனக்கு வேலை அதிகமா இருக்கிறப்போ என்கிட்ட வர கஸ்டமர்'ர பக்கத்துல உள்ள கடைக்கு கைகாட்டி விடுவேன். இருந்தாலும் வேலை பார்த்தா ஓங்கிட்டதான் தான் பண்ணுவேன்'னு சொல்லிட்டு வர கஸ்டமர் ஒத்த கால்'ல நிப்பாங்க.
இது எனக்கு மட்டும் பொருந்தாது. இங்க வேலை பாக்குற சைக்கிள் மெக்கானிக், பைக் மெக்கானிக், டீசல் மெக்கானிக், டிங்கரிங், கார், லாரி டிராக்டர், ஸ்ப்ரிங் மெக்கானிக் இதுபோல எல்லாரும் அவங்கவங்க தங்களோட வேலைய அம்புட்டு அழகா செஞ்சுக்கிட்டு வர்றதால தான் இந்த சாலை இவ்ளோ நெருக்கடியா இருக்கு. அவ்வளவு ஏன் நான் வந்ததுல இருந்து இந்த சாலையில பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்குன்னா ஒரு ஃபாஸ்ட் ஃபுட் கடை மட்டும்தான் வந்திருக்கு மத்தபடி இங்க உள்ள 200க்கும் மேற்பட்ட கடைங்க மெக்கானிக் கண்ட்ரோல்ல தான் இருக்கு" என்று கூறினார்.
அடுத்தபடியாக மோட்டார் வாகன பழுது பார்க்கும் நல சங்க மாவட்டத் துணைத் தலைவர் உத்திராபதி அவர்களிடம் பேசினோம் " ஆரம்ப காலத்தில் இச்சாலையில் பத்திற்கும் மேற்பட்ட லாரி பழுது பார்க்கும் கடைகள் தான் இருந்தது. ஏனெனில் இப்பகுதி விவசாய சார்ந்த பகுதியாக உள்ளதால் விவசாயிகளின் நெல் மணிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து திருவாரூர் எம்.ஆர்.எம் அரிசி ஆலைக்கு கொண்டு வரும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை இந்த கடைகளில் சர்வீஸ் செய்து வந்தனர்.
பிறகு அந்தந்த கடைகளில் தொழில் கற்றுக் கொண்ட ஒவ்வொருவரும் சுயமாக கடை வைத்து தங்களது தொழிலை பெருக்கிக் கொண்டனர். பிறகு நவீன காலத்தால் ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஏற்றார் போல் ஒவ்வொரு விதமான கடைகள் உருவாகி, அது சார்ந்த உதிரிபாகங்களும் இச்சாலையை வளப்படுத்தி வருகிறது. பழைய தஞ்சை சாலையை பொறுத்தவரை உழைப்பின் அடையாளமாகவும், தொழிலாளர்களின் ஒற்றுமையாகவும், சமூக நல்லிணக்கமாகவும் தான் பார்க்கப்படுகிறது.
இவ்வுளவு ஏன் நம்மை நம்பி வரும் வரும் வாடிக்கையாளர்களை ஏமாற்றிவிட கூடாது என்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடை நடத்தும் தொழிலாளர்களும் இங்கு உள்ளனர்." என்று அந்தச் சாலையின் மகத்துவத்தை கூறினார்.
இப்போதும் கூட நம்மோடு பேசிய அனைவரும் அவர்களின் வேலைகளில் மூழ்கிபடிதான் தான் பேசினார்கள் என்றால் நம்மால் நம்ப முடியுமா!?