டெல்லி குடியரசு தின விழாவில் கரகாட்டம்; 100 கலைஞர்கள், 25 நாள் பயிற்சி... நெகிழும் தமிழக கலைஞர்கள்!
இந்தியாவின் 76 வது குடியரசு தின விழாவிற்கான முன்னேற்பாடுகள் எல்லா மாநிலங்களிலும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்தோ இந்தியா வந்துள்ளார்.
கலைநிகழ்ச்சிகள், அலங்கார ஊர்திகளின் அணிவகுப்புகள், முப்படையினரின் சாகச நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு வகையான நிகழ்வுகள் ஒவ்வொரு வருடமும் நடப்பது போலவே இந்த வருடமும் திட்டமிடப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி பங்கேற்காதது தமிழர்கள் இடையே சிறு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தமிழகத்திலிருந்து 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டு தமிழகத்தைச் சிறப்பிக்க உள்ள தகவல் வெளியானது. டெல்லி அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ள கலைஞர்களைத் தொடர்பு கொண்டு பேசினோம்.
"என் பேரு கோவிந்தராஜ். 22 வருசமா கிராமியக் கலையில் இருக்கேன். மதுரைதான் சொந்த ஊரு. மூணு வருசமா மதுரை இசைக்கல்லூரியில கிராமியக் கலை ஆசிரியரா வேலை செய்றேன். இதுவரைக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடைகளில் நிகழ்ச்சிகள் பண்ணிருக்கேன். தமிழக அரசின் உயரிய விருதான கலைமாமணி விருதும் வாங்கியிருக்கேன். குடியரசு தின நிகழ்ச்சியில கலந்துக்கணுங்கிறது என்னோட பல வருசக் கனவு. ஆனா, அதுக்கான வழி தெரியாம இருந்தேன். மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் சங்கீத நாடக மன்றம் இணையதளப் பக்கம் மூலமா விண்ணபிக்கணுங்கிற தகவல் சமீபத்தில்தான் தெரிஞ்சுது. கரகாட்ட கலைக்கு என் குழுவின் சார்பாக நான் விண்ணப்பிச்சேன்.
சில வாரத்துல அவங்க எங்களைத் தொடர்பு கொண்டாங்க. '60 கரகாட்டக் கலைஞர்கள் வேணும். குழுவா வர முடியுமா'னு கேட்டாங்க. நான் ஏற்கனவே நிறைய பேருக்குப் பயிற்சிகள் வழங்கியிருந்தால கலைஞர்களைக் குழுவாக்கும் முயற்சியில இறங்குனேன். தமிழ்நாடு முழுக்க இருக்கும் கலைஞர்கள்ல 100 பேரைத் தேர்வு பண்ணி, அதுல நேர்த்தியா ஆடக்கூடிய 60 பேரை நிகழ்ச்சிக்குப் பரிந்துரைச்சேன். அந்த 60 பேரும் ஒரு குழுவா இப்போ டெல்லி வந்துருக்கோம். இதுல 30 பேர் கல்லூரி மாணவ, மாணவியர். மீதி 30 பேர் முழு நேர கலைஞர்கள். மதுரை, திருச்சி, சிவகாசி, திண்டுக்கல், கும்பகோணம், சென்னைனு நிறைய ஊர் கரகாட்டக் கலைஞர்கள் குழுவா இணைஞ்சு வந்துருக்கோம்.
தமிழ்நாட்டில் இருந்து இன்னும் 2 குழுவும் வந்துருக்காங்க. மொத்தமா தமிழ்நாட்டில் இருந்து 100 கரகாட்டக் கலைஞர்கள் வந்துருக்கோம். இதுல நிறைய பேருக்கு இதுதான் முதல் வெளியூர் பயணம். முதல் முதலா இவ்வளவு பெரிய இடத்தைப் பாக்குறாங்க. பெரிய அளவுல அங்கீகாரம் கிடைச்ச சந்தோசத்துல இருக்காங்க. எல்லாரும் நிகழ்ச்சிக்குப் புதுத்துணி கூட எடுத்துட்டு வந்துருக்காங்க" என நெகிழும் கோவிந்தராஜிடம் நிகழ்ச்சி ஏற்பாடுகள் பற்றி கேட்டோம்.
"இந்தியா முழுவதும் இருந்து 5000 கலைஞர்கள் அவங்களோட பாரம்பரிய நடனம் ஆட வந்துருக்காங்க. கலைஞர்கள் அனைவரையும் 500 பேர் கொண்ட 10 குழுக்களாகப் பிரிச்சுருக்காங்க. பாராளுமன்றத்தில் இருந்து இந்தியா கேட் வரை 5000 கலைஞர்களும் நின்னு தங்கள் பாரம்பரிய நடனத்தை வெளிப்படுத்த இருக்கோம். நாங்கள் ஆடும் போது, 'ஜெயத்தி ஜெய ம்ம பாரதமே' என்ற பாடல் ஒலிக்க இருக்கு.
இதில் 10 தமிழர்கள் கொண்ட குழு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் அமரும் இடத்தில் நடனமாட இருக்கிறோம். அந்த குழுவில் நானும் இருக்கேன். தமிழர்களுக்கு மத்திய அரசு இவ்வளவு இந்த முக்கியத்துவம் தந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழக ஊர்தி இடம்பெறாதா ஏக்கத்தை நாங்கள் சரிசெய்து தமிழகத்திற்குப் பெருமை சேர்ப்போம்.
நாங்க டெல்லி வந்து 25 நாள் ஆகுது. ஒத்திகை, குடியரசு தின விழா நிகழ்ச்சி என மொத்தம் 26 நாள் நாங்க டெல்லியில இருக்கணும்னு சொல்லியிருந்தாங்க. ஒத்திகை நாளுக்கு ஒரு நபருக்கு 600 ரூபாயும், குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கு 3000 ரூபாய் கட்டணமும் பேசியிருக்காங்க. போக்குவரத்து , உடைகளுக்கு நாங்க முதலீடு பண்ணி இங்க வந்துட்டோம். நிகழ்ச்சி முடிச்சு கிளம்பும் போது தொகையைத் தர்றோம்னு சொல்லியிருக்காங்க. உணவு, தங்குற இடம் ஆகிய செலவுகளை அரசாங்க தரப்பில் இருந்தே சிறப்பாக செஞ்சு கொடுத்துட்டாங்க.
நேத்து எல்லா கலைஞர்களும் சேர்ந்து கின்னஸ் சாதனையும் பண்ணிருக்கோம். 20 நாள்களாக டெல்லியில இருக்குற ஒரு விவசாயக் கல்லூரியில வெச்சு தான் ஒத்திகைகள் நடந்துச்சு. ஆனால் கடந்த 4 நாள்களாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலேயே இரவு நேரத்துல ஒத்திகை பண்றோம். இரவு 12 மணிக்கு இந்தியா கேட் வந்தா மேக்கப், காஸ்டியூம் போட்டு இரவு முழுவதும் அங்கேயே பாதுகாப்புடன் தங்குறோம். அடுத்த நாள் காலை 8 மணி முதல் ராணுவ அணிவகுப்பு, பல்வேறு மாநில அலங்கார ஊர்திகள் அணி வகுப்புகள் நடைபெறும்.... மதியம் 12 மணிக்கு 5000 கலைஞர்களின் ஒத்திகை நடைபெறுது. குளிர் அதிகமா இருப்பதுதான் சிக்கலா இருக்கு. ஆனா, கரகத்தைத் தூக்கிட்டா அதையெல்லாம் மறந்து கால்கள் தன்னால ஆட ஆரம்பிச்சுரும்.
இந்த வாய்ப்பின் மூலம் பல்வேறு மாநிலங்களின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றி தெரிஞ்சு கொள்ள முடிந்தது. புதிய நண்பர்கள், புதிய உறவுகள் கிடைத்திருக்கிறார்கள். இதுபோல மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் தமிழ்நாட்டு கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்" என்று கோரிக்கையோடு விடைபெற்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.