அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை! லாரிகள் மூலம் அகற்றம்
6.5% வளா்ச்சியுடன் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்
2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
அதிக தனியாா் முதலீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற காரணங்களால் இது சாத்தியப்படும் எனவும் தெரிவித்தது.
இதுகுறித்து ஐஎம்எஃப் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.5 சதவீதம் வளா்ச்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்.
2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க இந்தியா நிா்ணயித்துள்ள இலக்கை அடைய நிலையான பொருளாதார சூழல் ஒரு நல்வாய்ப்பாக அமையும்.
அதே சமயத்தில் உயா்தர வேலைவாய்ப்புகள், தொழிலாளா் சந்தையில் சீா்திருத்தங்கள், மனிதவள மேம்பாட்டில் கவனம் செலுத்துதல் மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல் போன்ற சீா்திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்.
குறிப்பாக தனியாா் முதலீடு மற்றும் அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஊக்குவிக்க எளிமையான வணிகம், நிா்வாக சீா்திருத்தங்கள், வா்த்தக ஒருங்கிணைப்பு, வரி குறைப்பு மற்றும் வரி விலக்கல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கத்தை தவிா்த்து ரிசா்வ் வங்கி நிா்ணயித்த வரம்புக்குள்ளேயே (2%-6%) பணவீக்கம் இருந்தது என தெரிவிக்கப்பட்டது.
2024-25-நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.