7 ஆயிரத்தைக் கடந்த கரோனா: ஒரேநாளில் 306 பேருக்குப் பாதிப்பு!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 306 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேசமயம் கேரளத்தில் 3, கர்நாடகத்தில் இருவர், மகாராஷ்டிரத்தில் ஒருவர் என ஆறு பேர் தொற்று பாதித்து பலியாகியுள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் 43 வயதுடைய ஆண் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாகவும், மற்றவர்கள் வயதானவர்கள் மற்றும் முன்னதாக சுவாச மற்றும் நாள்பட்ட உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள்.
இந்தியாவில் தற்போது கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன, இதற்கு LF.7, XFG, JN.1 மற்றும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட NB.1.8.1 துணை மாறுபாடு உள்ளிட்ட புதிய வகை வைரஸ்கள் காரணமாகும்.
கேரளத்தில் அதிகளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தரவுகளின்படி 2,223 பேர் கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் புதிதாக 114 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்தம் 1,223 பதிவாகியுள்ளது. தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 66 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்தம் 757 வழக்குகளும், தமிழகத்தைப் பொருத்தவரை மொத்த பாதிப்பு 204 ஆகப் பதிவாகியுள்ளன.