AI Mazu: பக்தர்களுக்கு ஆசி வழங்கும் டிஜிட்டல் தெய்வம்.. மலேசிய தியான்ஹோ கோயிலில் AI வழிபாடு
இன்றைய நவீன உலகில், அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. இந்த நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சுகாதாரம், பராமரிப்பு தொடங்கி பொழுதுபோக்கு வரை செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பெரிய அளவில் உள்ளது. பயனர்களுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு வசதியாக இருப்பதால் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.
வேலை, பொழுதுபோக்கு இவற்றில் ஏஐ இருப்பது குறித்து கேள்விப்பட்டிருப்போம் ஆனால் தெய்வ வழிபாடுகளில் கூட ஏஐ நுழைந்துவிட்டது.
மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோவிலில், ஏஐ மூலம் இயங்கும் தெய்வ சிலையை ( மசு ) அறிமுகப்படுத்தி உள்ளனர்.
மலேசிய தொழில்நுட்ப நிறுவனமான ஐமாசினால் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தெய்வம், பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவது, வழிகாட்டல் சொல்வது, ஆலோசனை கொடுப்பது என தெய்வத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது.
மசுவின் 1065 -வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த தொழில்நுட்பத்தை தொடங்கியுள்ளனர். மசு என்பது சீன நாட்டுப்புற மதம், சீன பௌத்தம், கம்யூனிசம் ஆகியவற்றால் வழங்கப்படும் கடல் தெய்வமாகும்.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, லின் மோ என்ற இயற்பெயர் கொண்ட மசு, 960 ஆம் ஆண்டு சீனாவின் உள்ள மெய்சோ தீவில் பிறந்தார்.

கப்பல் விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற முயன்றபோது அவர் இறந்ததாக கதைகள் உள்ளன. அவர் இறந்த பிறகு, காவல் தெய்வமாக இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். மசு உலகெங்கிலும் உள்ள சீன சமூகங்களால், குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் வணங்கப்படுகிறது.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், சீன நடிகையான லியு தாவோ சில வீடுகளில் கடவுளாக வணங்கப்படுகிறார். இவரை மசுவின் உயிருள்ள வடிவம் என்று மக்கள் நம்புகின்றனர். தொலைக்காட்சி நாடகத்தில் லியு தாவோ தெய்வமாக நடித்த பிறகு இந்த நம்பிக்கை தொடங்கியிருக்கிறது. லியு தாவோவின் புகைப்படங்களை வீடுகளில் வைத்து வணங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.