ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட்: அயர்லாந்து 76 ரன்கள் முன்னிலை!
Ananya: ரூ.4500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் இன்றும் ராணியாக வாழும் ஓர் இந்திய பெண் -யார் இவர்?
இன்றும் ராணிகள் வாழ்க்கையை வாழ்கிறார்களா? ரூ.4500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் வசிக்கும் ஓர் இந்திய பெண் பற்றியும் அவரின் மன்னர் வம்சாவளி பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்தியாவில் மன்னர்கள், ராணிகள், ஒரு காலத்தில் வாழ்ந்தார்கள் என்றும் அந்த சகாப்தம் எல்லாம் முடிவடைந்துவிட்டது என்றும் நம் எண்ணிக் கொண்டிருக்கிறோம், ஆனால் பல அரசு குடும்பங்கள் தங்களது மரபுகளையும் வழக்கங்களையும் இன்னும் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் குவாலியரின் சிந்தியா குடும்பம் இன்றும் அரச குடும்பமாக வாழ்ந்து வருகிறது.
சிந்தியா குடும்பத்தின் இளவரசியான அனன்யா ராஜே சிந்தியா ரூ.4,500 கோடி மதிப்புள்ள அரண்மனையில் இன்றும் ராணியாக தான் வாழ்ந்து வருகிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் மகாராணி பிரியதர்ஷினி ராஜே ஆகியோரின் மகளான அனன்யா ராஜே சிந்தியா அரச குடும்பத்தின் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார்.
இளவரசி அனன்யா தனது தாயை விட அழகாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். உலகின் 50 அழகான பெண்களின் பட்டியலில் இவரது பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வளவு புகழ்பெற்ற வம்சாவளியை சேர்ந்தவராக இருந்தாலும் பொதுவெளியில் தன்னை அவ்வளவாக பிரபலப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டாராம் அனன்யா.
குதிரை சவாரி, கால்பந்து ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கும் அனன்யா ஆடம்பர வாழ்க்கையைத் தவிர்த்து, தனக்கென ஒரு வேலை மற்றும் அடையாளத்தை உருவாக்க நினைக்கிறார்.
இளவரசி அனன்யா ராஜே சிந்தியா, டெல்லியில் உள்ள பிரிட்டிஷ் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார் மற்றும் ஐலேண்ட் ஸ்கூல் ஆஃப் டிசைனில் தனது உயர் கல்வியையும் முடித்தார். மேலும், அவர் இளங்கலையில் நுண்கலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
ஊடக தகவல்களின்படி பிரபல ஆப் ஆன ஸ்னாப்சாட்டில் இவர் பயிற்சி பெற்றதாகவும், பின்னர் ஆப்பிள் நிறுவனத்தில் ஒரு பயிற்சி வடிவமைப்பாளராக சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. அனன்யா முதன்முதலில் 2018-ல், மதிப்புமிக்க பாரிஸ் பேஷன் நிகழ்வான 'லெ பால்' -ல் பங்கேற்றபோது பொதுமக்களின் கவனத்தை பெற்றிருக்கிறார். அனன்யா வாழும் அரச இல்லத்தின் பெயர் `ஜெய் விலாஸ் அரண்மனை' ஆகும்.
ஜெய் விலாஸ் அரண்மனை
4,500 முதல் 5,000 ரூபாய் கோடி மதிப்புள்ள இந்த அரண்மனை, கட்டடக்கலையில் தனித்து நிற்கிறது.
1874-ம் ஆண்டு மகாராஜா ஜெயஜிராவ் சிந்தியாவால் கட்டப்பட்ட இந்த அரண்மனை, பிரெஞ்சு கட்டடக் கலைஞர் சர் மைக்கேல் ஃபிலோஸால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 12,40,771 சதுர அடி பரப்பளவில், 400 அறைகளைக் கொண்டுள்ள இந்த அரண்மனையில் பிரமாண்டமான தர்பார் ஹால் அதன் ஆடம்பரத்தின் சிறப்பம்சமாக திகழ்கிறது.
இந்த அரண்மனையின் மற்றொரு தனித்துவம் என்னவென்றால் அங்கு இருக்கும் 3500 கிலோ எடை கொண்ட சரவிளக்கு என்கின்றனர். உலகிலேயே மிகப்பெரிய விளக்காக கருதப்படும் இதை அங்கு வைப்பதற்கு முன்பு பத்து யானைகளை அதன் மீது பத்து நாள்கள் நடக்க வைத்து அதன் வலிமையை சோதித்ததாகவும் கூறப்படுகிறது.
560 கிலோ தங்கத்தால் ஆன சுவரை கொண்ட அறை, உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், பல ஆடம்பர தனித்தனி அறைகள், அருங்காட்சியங்கள் என பல சிறப்பு அம்சங்கள் இந்த அரண்மனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அரண்மனையின் பிரம்மாண்டத்தை பொதுமக்களும் நேரில் பார்க்கும் வகையில், ஜெய் விலாஸ் அரண்மனை, செவ்வாய் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலும், நேரில் சென்றும் முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்களும் அந்த அரண்மனைக்கு சென்று அதில் இருக்கும் விஷயங்களை பார்த்துவிட்டு வாருங்களேன்.