பிசிசிஐ ஒப்பந்தம்: ரோஹித், கோலிக்கு ஏ+; ஸ்ரேயாஸ், இஷான் சேர்ப்பு! முழு விவரம்..
Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால் TB நோய் வருமா?
Doctor Vikatan: ஐஸ் வாட்டர் குடித்தால், நுரையீரல் தொற்று ஏற்படுமா... சாதா தண்ணீர் குடித்தால், தாகம் அடங்குவதில்லை. அதனால், தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து ஐஸ் வாட்டரை குடித்து வருகிறேன். திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டுவிட்டது. அதற்காக மருத்துவரை சந்தித்தபோது டி.பிக்கான அறிகுறியும் இருப்பதாக சொல்கிறார்கள். ஐஸ் வாட்டர் குடித்தால் டி.பி நோய் வருமா... இது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.

தண்ணீரால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம். அதனால்தான் எப்போதும் தண்ணீரைக் கொதிக்கவைத்துக் குடிக்க அறிவுறுத்துகிறோம். கொதிக்கவைக்கும்போது அதிலுள்ள கிருமிகள் அழிந்துவிடும்.
சாதாரண தண்ணீரைக் குடிக்கும்போது அதில் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் இல்லாதவரை பிரச்னையில்லை. அதுவே அதில் கிருமிகள் இருந்தால் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தும். ஆனால், நீங்கள் கேட்டுள்ளதுபோல தண்ணீரினால் டி.பி எனப்படும் காசநோய் பரவாது.
இருமும்போது கிருமிகள் காற்றின்வழியே தொற்றுவதால் ஏற்படக்கூடிய பிரச்னை அது. டி.பிதான் வர வாய்ப்பில்லையே தவிர, மற்ற தொற்றுகள் வரலாம் என்பதால்தான் காய்ச்சிய நீர் அல்லது ஃபில்டர் செய்யப்பட்ட, யுவி ட்ரீட் செய்யப்பட்ட தண்ணீரைக் குடிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
ஃபில்டர் செய்தாலுமே அதன் அளவைப் பொறுத்து வடிகட்டப்படும் தன்மையானது மாறுபடும். அதாவது அந்தக் காலத்தில் சாதாரண துணியை வைத்து வடிகட்டியதற்கும் தற்போதைய யுவி ஃபில்டருக்கும் வித்தியாசங்கள் உண்டு. ஐஸ் வாட்டர் குடித்தால் இன்ஃபெக்ஷன் வருமா என்றால், அந்தத் தண்ணீர் எப்படிப்பட்டது, எங்கிருந்து பெறப்பட்டது என்பதுதான் முக்கியம். ஏற்கெனவே சொன்னதுபோல அந்தத் தண்ணீரில் கிருமிகளின் தாக்கம் இருந்தால் தொற்று வரலாம். அது ஐஸ் வாட்டரிலும் வரலாம், சாதாரண தண்ணீரிலும் வரலாம்.

அலர்ஜி தன்மை உள்ளவர்களுக்கு குளிர்ந்த தண்ணீர் ஏற்றுக்கொள்ளாமலிருக்கலாம். அதைக் குடித்தாலே உடனே சளி பிடித்துக்கொள்ளும், தொண்டையில் கோழை உற்பத்தியாகும். சாதாரண தண்ணீர் குடித்தால் தாகம் தணிவதில்லை என்பதே ஒருவித தவறான நம்பிக்கைதான். உண்மையில், ஐஸ் வாட்டர் குடித்தால்தான் தாகம் அடங்காது, சாதாரண தண்ணீர் குடித்தால் சட்டென தாகம் அடங்கும். நம்மில் பலரும் ஐஸ் வாட்டர் குடித்துப் பழகியவர்களாக இருப்பதால்தான் அப்படி ஓர் உணர்வுக்குள்ளாகிறோம். ரொம்பவும் சூடாகவும் இல்லாமல், குளிர்ச்சியாகவும் இல்லாமல் மிதமான சூடுள்ள நீர்தான் குடிக்க ஏற்றது.
வெயில் நாள்களில் வெளியே செல்லும்போது வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டில் எடுத்துச்செல்வதுதான் பாதுகாப்பானது. தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியிடங்களில் இளநீர், வெள்ளரிக்காய், தர்பூசணி போன்றவற்றைச் சாப்பிட்டு தாகம் தணித்துக்கொள்ளலாம். இளநீர் குடிக்கும்போது அத்துடன் கொடுக்கப்படும் ஸ்ட்ரா எவ்வளவு சுத்தமானது என்பதைப் பார்க்க வேண்டும். கரும்பு ஜூஸ், பழ ஜூஸ் குடிக்கும்போது, அதற்குப் பயன்படுத்தும் ஐஸ்கட்டிகள் எங்கிருந்து பெறப்பட்டவை, எப்படி உடைக்கப்பட்டவை, எந்த அளவுக்கு சுத்தமானவை என்பதெல்லாம் கவனிக்கப்பட வேண்டும். அந்த ஐஸ் பயன்படுத்திய ஜூஸ் குடிக்கும்போது நிச்சயம் தொற்று வரும். மற்றபடி ஐஸ் வாட்டருக்கும் டி.பி நோய்க்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
