Gaza: 'உணவுக்காக கையேந்தியவர்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்' - என்ன நடந்தது?
இஸ்ரேல் படைகள் காசாவில் 59 பொது மக்களை சுட்டுக்கொன்றதாகவும், அதில் குறைந்தது 17 பேர் உணவு உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளைப் பெற முயன்றபோது கொல்லப்பட்டதாகவும் அல்ஜசீரா செய்தி ஊடகம் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்தும் காசா மனிதாபிமான அறக்கட்டளையில் உதவிகளைப் பெறுவதற்காக சென்ற மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை வன்மையாக கண்டித்துள்ளது ஐ.நா.சபை. இந்தத் தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து காசாவுக்குள் உதவிப்பொருட்கள் செல்வதைத் தடுத்து வைத்திருந்த இஸ்ரேல், புதிய மனிதாபிமான உதவிகள் வழங்கும் முறையைக் கொண்டுவந்திருக்கிறது.
தற்போது காசாவுக்கு செல்லும் உதவிகள் அனைத்தும் அமெரிக்காவின் மேற்பார்வையில் காசா மனிதாபிமான அறக்கட்டளையின் (Gaza Humatarian Foundation - GHF) மூலமே செய்யப்படுகிறது. இந்த அமைப்பு இஸ்ரேல் படையினரால் பாதுகாக்கப்படுகிறது.
இந்தத் திட்டம் மூலம் வழங்கப்படும் உதவிகள் போதுமானதல்ல, ஆபத்தானது மற்றும் மனிதாபிமான பாரபட்சமின்மை கொள்கைகளை மீறுகிறது எனக் கூறி இந்த திட்டத்தை நிராகரித்துள்ளது ஐ.நா.
திங்கள் (16.06.2025) அன்று நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி இஸ்ரேல் ராணுவம் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு முன்பும் இதுபோல உதவி மையங்கள் அருகில் தாக்குதல் நடத்தியிருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் தரப்பினர் தாக்குதல்களைத் தூண்டியதாக விளக்கமளிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
"அது ஒரு பொறி..."
திங்கள் இரவு GHF வெளியிட்ட அறிக்கையில், எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நான்கு மையங்களில் உணவுகளை விநியோகித்ததாகக் கூறியிருக்கிறது.
இறந்தவர்கள மற்றும் காயமடைந்தவர்கள் ராஃபாவில் உள்ள செஞ்சிலுவை சங்க மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்பு பசியில் வாடி வந்த மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை கூட விடுக்கவில்லை என அல்ஜசீரா தளம் தெரிவிக்கிறது.
"நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு உணவு கிடைக்கும் என்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் அது ஒரு பொறியாக மாறி, கொலை செய்யப்படுகிறோம். யாரும் அங்கு செல்ல வேண்டாம் என நான் அறிவுறுத்துகிறேன்" என உதவிகளைப் பெற முயன்று உயிருடன் திரும்பிய அகமது ஃபயாத் என்ற நபர் கூறியதாக ராய்டர்ஸ் தளம் தெரிவித்துள்ளது.