Guru Mithreshiva: "இந்த 3 மந்திரங்களை பின்பற்றினால் போதும்..." - இதயவியல் வல்லுநர் சொக்கலிங்கம்
ஆன்மிக குரு, யோகா நிபுணர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முகம் கொண்ட குரு மித்ரேஷிவா எழுதியுள்ள பணவாசம், கருவிலிருந்து குருவரை, உனக்குள் ஒரு ரகசியம் ஆகிய நூல் வெளியீட்டு விழா சென்னை சர்.பிட்டி தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் பேசிய இதயவியல் வல்லுநர் மருத்துவர் சொக்கலிங்கம் , "இந்த சொக்கலிங்கம் 80 வயதுவரை ஒரு மாத்திரைக் கூட சாப்பிட்டதில்லை. அதற்காக நீங்கள் உங்கள் மருந்துகளை நிறுத்திக்கொள்ளாதீர்கள். நான் என்னை குருவுடன் இணைத்துக்கொள்ள காரணம், என் இதயத்தைப் பார்த்துக் கொள்வதற்காகத்தான்.
என் 60 வருட அனுபவங்களை 6 நிமிடங்களில் சொல்கிறேன். நம் இதயம் 100 ஆண்டுக்கு மேல் இயங்க காத்திருக்கிறது. நம் சொத்து சுகங்களோ பட்டம் பதவிகளோ இதயத்தைக் காப்பாற்றாது, இதையத்தைக் காப்பாற்றும் ஒரே மருந்து மகிழ்ச்சி மட்டும்தான்.
மகிழ்ச்சியை இழக்காதவர்கள் என்னிடம் நோயாளியாக வர வாய்ப்பில்லை. அறிவோ, பணமோ, உழைப்போ, நேரமோ ஒன்றைக் கொடுப்பதுதான் மகிழ்ச்சி. கொடுப்பதைவிட பெரிய மகிழ்ச்சி விட்டுக்கொடுப்பது.
குருஜி சொல்வதுபோல தன்னை அறிவதுதான் அறிவு. உயிர் என்னும் தெய்வம் உடல் என்னும் கோவிலில் மட்டும்தான் இருக்க முடியும். குரு சொல்லும் மூன்று ‘உ’க்கள், உணர்வு, உணவு, உடற்பயிற்சி மிக முக்கியம்.
குருவின் மந்திரம், “எண்ணுகின்ற எண்ணம் சீராக, உண்ணுகின்ற உணவு சீராக, சிரான உடற்பயிற்சி” இதை சரியாக கடைபிடித்தால் போதுமானது.
இந்தியாவில்தான் அதிகபட்சம் மாரடைப்பு, சர்க்கரை வியாதி, கேன்சர் உள்ளது. 20-30 வயதினர் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 90 பேர் இறக்கின்றனர். இதை குறைக்க குரு சொல்வதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பணம் சம்பதிப்பது மிக முக்கியம். ஆனால் பணம் சம்பாதிப்பதில் மகிழ்ச்சியை இழப்பதால்தான் நீங்கள் என்னிடம் அதை கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றுதான் குருஜி சொல்கிறார்.
வேளாவேளைக்கு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டும் போது சாப்பிட்டால் போதும். " எனப் பேசினார்.
Guru Mithreshiva நிகழ்ச்சி
விகடன் பிரசுரம் வெளியீடுகளான இந்தப் புத்தகங்களைப் பொருளாதார நிபுணர் நாகப்பன் , எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், இயக்குநர் லிங்குசாமி ஆகியோர் வெளியிட சி.கே .குமரவேல், ஜோதிடர் கே.பி . வித்யாதரன் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பெற்று கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.