மேட்டுப்பாளையம்: 15 வயது பள்ளி சிறுவனை கடித்த தெரு நாய் - ரேபிஸ் நோயால் உயிரிழந்...
IND VS WI: "ஒருவேளை Follow On கொடுக்காமல் பேட்டிங் ஆடியிருந்தால்" - வெற்றி குறித்து சுப்மன் கில்
இந்தியா வந்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை வகித்திருந்தது.
இந்நிலையில் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது.

இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லுக்கு இந்த வெற்றி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்துப் பேசிய சுப்மன் கில், "இந்திய அணியை வழிநடத்துவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை.
சூழலை உணர்ந்து அதற்கேற்ற யதார்த்தமான சரியான முடிவுகளை எடுக்க வேண்டுமென நினைக்கிறேன்.
சில சமயங்களில் வீரர்களின் தேர்வில் நீங்கள் கறாராகவும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.
குறிப்பிட்ட சூழலில் எந்த வீரர் நமக்கான ரன்களையும் விக்கெட்டுகளையும் எடுத்துக்கொடுப்பார் என்பதைக் கணித்து முடிவெடுக்க வேண்டும். நாங்கள் முதல் இன்னிங்ஸில் கிட்டத்தட்ட 300 ரன்கள் வரை முன்னிலை பெற்றிருந்தோம்.
நாங்கள் பாலோ ஆன் கொடுக்காமல் பேட்டிங் ஆடி 500 ரன்கள் வரை எடுத்திருந்தால், கடைசி நாளில் எங்களின் வெற்றிக்கு 6, 7 விக்கெட்டுகள் தேவைப்பட்டிருக்கும்.

அதை எடுக்க கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால்தான் பாலோ ஆன் கொடுத்தோம். நிதிஷ் ரெட்டிக்கு இந்த ஆட்டத்தில் ஓவர்கள் கிடைக்கவில்லை.
ஆனால், நாங்கள் சில வீரர்களை வெளிநாட்டுப் போட்டிகளுக்காக மட்டும் பயன்படுத்த விரும்பவில்லை. அது அவர்களுக்குக் கூடுதல் அழுத்தத்தையே கொடுக்கும்.
நாங்கள் சில வீரர்களுக்கு முழுமையாக வாய்ப்புக் கொடுத்து வளர்த்தெடுக்க விரும்புகிறோம்.
அப்போதுதான் அவர்களால் வெளிநாட்டிலும் போட்டிகளை வென்று கொடுக்க முடியும்.
எனக்கு மூன்று வயது இருக்கும் போதிலிருந்தே பேட்டிங் ஆடி வருகிறேன். பேட்டிங் ஆடும் போது ஒரு பேட்டராக மட்டுமே யோசிக்க நினைப்பேன்.

அணியை எப்படி வெல்ல வைக்கலாம் என்பது மட்டுமே என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும்.
ஆஸ்திரேலியா தொடரைப் பற்றி விமானத்தில் பயணிக்கும் போதுதான் யோசிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.