விழுப்புரம்: மேடையில் மயங்கி விழுந்த விஷால்; ``முழுமையான ஓய்வு தேவை'' - மருத்துவ...
India - Pakistan : "முடிவெடுப்பதில் இரு நாடுகளுக்கும் உதவ முடிந்ததில் பெருமை கொள்கிறேன்" - ட்ரம்ப்
பஹல்காம் தாக்குதலுக்கு (ஏப்ரல் 22) பதிலடியாக, தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் (மே 7) நடத்தியது. அதைத் தொடர்ந்து, மே 8-ம் தேதி இரவு ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகள் மீது பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த இந்தியா எதிர்த்தாக்குதல் நடத்தி முறியடித்தது.

நிலைமை மேலும் மோசமடையும் வேளையில், "அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டன." என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
அதன் பிறகு, பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார், இரு நாடுகளும் மோதல் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவிக்க, இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரியும் இதைத் தெரிவித்தார். `மோதல் நிறுத்தம் முடிவு வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த முடிவை இந்திய அரசுதான் அறிவித்திருக்க வேண்டும் எதற்காக இடையில் அமெரிக்கா?' என்ற விமர்சனங்களும் எழுந்தது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில், "தற்போதைய ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டிய நேரம் இது என்பதைப் புரிந்து கொள்ளும் வலிமை, ஞானம், மன உறுதியைக் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தானின் வலிமையான மற்றும் அசைக்க முடியாத சக்திவாய்ந்த தலைமையைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க துணிச்சலான முடிவை எடுக்க அமெரிக்கா உங்களுக்கு உதவ முடிந்தது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
இரு நாடுகளுடனும் கணிசமாக வர்த்தகத்தை அதிகரிக்கப் போகிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் தொடர்பாக ஒரு தீர்வை எட்ட முடியுமா என்பதைப் பார்க்க இருவருடனும் (இந்தியப் பிரதமர், பாகிஸ்தான் பிரதமர்) இணைந்து பணியாற்றுவேன். சிறப்பாகச் செயல்பட்ட இரண்டு தலைமைகளையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக!" என்று பதிவிட்டிருக்கிறார்.