ISSF: ஒன்னு இல்ல ரெண்டு... உலக துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த வீரர், வீராங்கனை!
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸில் நடைபெற்று வரும் (ஏப்ரல் 1 -11) ISSF - உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியா இரண்டு தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறது.
இதில், கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) நடைபெற்ற 'பெண்களுக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ்' பிரிவின் தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை சிஃப்ட் கவுர் சாம்ரா (23), 590 புள்ளிகள் பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

அதைத்தொடர்ந்து அன்றே நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதற்கட்டமான மண்டியிட்டு (Kneeling) சுடுதல், இரண்டாம் கட்டமான தரையில் குப்புறப்படுத்துச் சுடும் புரோன் ஷூட்டிங்கில் சாம்ரா சுமாராக விளையாடி 8-ம் இடத்துக்குச் சென்றார்.
வெற்றிக்கான வாய்ப்பே இல்லாத அந்த நிலையில், இறுதிக் கட்டமான நின்று (Standing) சுடுதலில் சாம்ரா தனது முழு திறனையும் வெளிப்படுத்தி 458.6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
வெற்றி குறித்து சாம்ரா, "சீனியர் நிலையில் நான் வெற்றி பெறும் முதல் தங்கப் பதக்கம் இது. மனம் அற்புதமாக உணர்கிறது. மண்டியிட்டு சுடுதலில் பின்னடைவைச் சந்தித்தாலும் அடுத்த நிலைகளில் சிறப்பாக விளையாடிய அனுபவங்கள் ஏற்கனவே இருக்கிறது. இருப்பினும், மண்டியிட்டு சுடுதலில் சிறப்பாகச் செயல்பட இன்னும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
சாம்ராவின் இந்தத் தங்கப் பதக்கம் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா தனது முதல் தங்கப் பதக்கத்தைப் பெற்றது. இந்த நிலையில், சாம்ரா தங்கம் பெற்ற இரண்டாவது நாளே இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம் கிடைத்திருக்கிறது.

நேற்று முன்தினம் (ஏப்ரல் 6) நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் பிரிவின் தகுதிச் சுற்றில், இந்தியா வீரர்கள் அர்ஜுன் சிங் பபுதா 634.5 புள்ளிகளுடனும், ருத்ராங்க்ஷ் பட்டீல் 633.7 புள்ளிகளுடனும் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
இருப்பினும், இறுதிப் போட்டியில் அர்ஜுன் சிங் பபுதா பின்னடைவைச் சந்திக்க, ருத்ராங்க்ஷ் பட்டீல் 252.9 பெற்று முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
இதன் மூலம், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இரண்டாவது தங்கம் சேர்ந்தது.