பூந்தமல்லி - போரூர் மெட்ரோ டிசம்பரில் பயன்பாடுக்கு வரும்: நிர்வாக இயக்குநர் சித...
Jafar Panahi: ஹிஜாப்பை எதிர்த்து உயரிய விருதை வென்ற கலைஞன் - யார் இந்த ஜாஃபர் பனாஹி?
கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் இடைவிடாமல் மொத்த அரங்கமே அதிர, அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். உலக சினிமா ஆர்வலர்கள் இம்முறையும் அவர் காணொளி மூலம் விருது பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்து மேடையேறுகிறார் அந்த 64 வயது கலைஞன். 'உலக சினிமாவின் முகவரி' என்று அழைக்கப்படும் கான் (Cannes) திரைவிழாவின் 78-வது ஆண்டு விழாவில், சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான "பால்ம் டி’ஓர்" (Palme d'Or) விருதைப் பெற ஜாஃபர் பனாஹி மேடையேறிய தருணத்தில் நடந்த நிகழ்வே இது. 'It Was Just an Accident' என்ற அவரது சமீபத்திய படைப்புக்கே கான் திரைவிழாவின் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஈரானில் சட்டவிரோதமாக ரகசியமாகப் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அந்நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை எதிர்க்கும் முக்காடு அணியாத பெண் கதாபாத்திரங்களைத் துணிச்சலுடன் சித்திரிப்பதாக கான் அமைப்பு குறிப்பிடுகிறது.

சட்டவிரோதம் என்ற வார்த்தை ஜாஃபர் பனாஹிக்கு புதிதல்ல. அவர் இயக்கிய 12 படங்களில், 6 படங்கள் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டவை, 9 படங்கள் சொந்த நாட்டில் தடைசெய்யப்பட்டவை. ஈரானின் கடுமையான தணிக்கைச் சட்டங்களை மீறி, தனது தாய்நாட்டின் சமூக, கலாசாரப் போராட்டங்களைப் பிரதிபலிக்கும் திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர் ஜாஃபர் பனாஹி. அவரது படைப்புகள் ஈரானிய சமூகத்தின் உண்மை முகத்தை உலகிற்கு வெளிப்படுத்துகின்றன. நியோரியலிசத்தின் அடையாளமாக, பெண்களின் பிரச்னைகள், சமூகப் பாகுபாடுகள் மற்றும் மனித உரிமைகளை எளிமையாகவும் ஆழமாகவும் சித்திரிக்கின்றன.
டெஹ்ரானின் ஏழ்மையான பகுதியில் பிறந்த பனாஹி, ஈரானிய புதிய அலை சினிமாவின் முக்கிய பிரதிநிதியாக விளங்குகிறார். ஆரம்பத்தில் ஈரானிய தொலைக்காட்சி நிறுவனத்தில் தனது பயணத்தைத் தொடங்கியவர், பல குறும்படங்களை இயக்கிய பிறகு, ஈரானிய சினிமாவின் ஜாம்பவான் அப்பாஸ் கியாரோஸ்டமியின் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 1995ல் பனாஹி தனது முதல் முழு நீளப்படமான 'தி ஒயிட் பலூன்' படத்தை இயக்கினார். தெஹ்ரானில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மீன் வாங்க முயலும் ஒரு சிறுமியின் கதையைப் பேசிய இப்படம், கேன்ஸ் திரைப்பட விழாவில் கேமரா டி’ஓர் விருது உட்படப் பல சர்வதேச விருதுகளை வென்றது. இருப்பினும், ஈரான் அரசு இதை ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் பனாஹிக்கு அமெரிக்க நிருபர்களுடன் பேசவோ, சன்டான்ஸ் விழாவிற்குச் செல்லவோ தடை விதித்தது.

1997-ல் 'தி மிரர்' படத்தை இயக்கினார், இது ஒரு சிறுமியின் தனி பயணத்தைப் பற்றியது. இப்படம் லோகார்னோ திரைப்பட விழாவில் கோல்டன் லெபர்ட் விருதை வென்றது. 2000-ல் 'தி சர்க்கிள்' படம் ஈரானில் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை விமர்சித்தது. இப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் 'கோல்டன் லயன்' விருதை வென்றது, ஆனால் ஈரானில் தடை செய்யப்பட்டது. அவரது படங்கள் உலகளவில் பாராட்டப்பட்டாலும், ஈரானில் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டன. இது 'கிரிம்சன் கோல்டு' (2003), 'ஆஃப்சைட்' (2006) போன்ற படங்களில் பிரதிபலித்தது. குறிப்பாக, ஈரானில் பெண்களுக்குக் கால்பந்து ஆட்டங்களைப் பார்க்கத் தடை இருக்க, மாறுவேடமிட்டு மைதானத்தில் நுழைய முயலும் சிறுமிகளின் கதையைப் பேசியது 'ஆஃப்சைட்'. தனது மகளின் அனுபவத்தை, ஈரான்-பஹ்ரைன் ஆட்டத்தில் படமாக்கினார். இதற்காக ஒரு போலி திரைக்கதையை அரசுக்குச் சமர்ப்பித்து, 39 நாட்களில் டிஜிட்டல் கேமராவில் படமாக்கினார். இப்படம் பெர்லின் விழாவில் Silver Bear Jury Grand Prix விருதை வென்றது.
இதனால் அவர் சந்தித்த சர்ச்சைகளும், சட்டச் சிக்கல்களும் ஏராளம். 2010-ல், 2009-ல் நடந்த அரசுக்கு எதிரான பெரும் போராட்டங்களை ஆதரித்ததற்காகவும், ஈரானின் நவீன நிலைமைகளை விமர்சிக்கும் படங்களை உருவாக்கியதற்காகவும், படம் எடுப்பதற்கும், நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் 20 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. மேலும், ‘அரசுக்கு எதிரான பிரசாரம்’ என்ற குற்றச்சாட்டில் ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். இதில் இரண்டு மாதங்கள் மட்டுமே சிறையிலிருந்த அவர், 2011-ல் வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், பனாஹி தனது கலைப் பயணத்தை நிறுத்தவில்லை. நான்கு சுவர்களுக்குள் இருந்தபடியே 'This is Not a Film' என்ற ஆவணப்படத்தை ஐபோன் மற்றும் டிஜிட்டல் கேமராவைப் பயன்படுத்தி 4 நாட்களில் எடுத்தார். இதை ஒரு பென் டிரைவில் பதிவு செய்து, கேக்கின் மூலம் கேன்ஸ் திருவிழாவுக்கு அனுப்பப்பட்டது என்று இன்றுவரை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதனை தற்போது பனாஹி மறுத்துள்ளார்.

2011-ல் பெர்லின் திரைப்பட விழாவில் நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த பனாஹிக்குப் பதிலாக ஒரு காலி நாற்காலி வைக்கப்பட்டபோது, உலகம் அவரை கவனிக்கத் தொடங்கியது. அடுத்து, மறைமுகமாக இயக்கிய 'க்ளோஸ்டு கர்டெய்ன்' படம் 2013-ல் பெர்லின் திரைப்பட விழாவில் Silver Bear for Best Script விருதை வென்றது. இப்படி ஒவ்வொரு படமும் ரகசியமாக எடுக்கப்பட்டு, பல யுக்திகளைப் பயன்படுத்தியது. 2015-ல் வெளியான 'டாக்ஸி' படத்தை எடுக்க, டெஹ்ரான் நகரில் உண்மையாகவே டாக்ஸி ஓட்டுநராக நடித்து இயக்கினார். இதில், வழக்கறிஞராகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்ட ஒருவர், கடுமையாகக் காயமடைந்து உயில் எழுதும் ஒருவர், மரண தண்டனையை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் நபர்கள் என பல்வேறு ஈரானியர்களுடனான உரையாடல்களைப் பதிவு செய்தார். இப்படம் ஈரானிய குடியரசின் அன்றாட வாழ்க்கையை நுணுக்கமாக வெளிப்படுத்தியது. இதுவும் ஈரானில் தடை செய்யப்பட்டாலும், 65-வது பெர்லின் திரைப்பட விழாவில் 'Golden Bear' விருதை வென்றது.

மனிதநேய நிகழ்வுகளைக் கவித்துவமாகவும், கலைநயமாகவும் வெளிப்படுத்துவது பனாஹியின் படங்களின் தனித்தன்மை. தீய கதாபாத்திரங்கள் இல்லை; அனைவரும் நல்லவர்களாகவே சித்திரிக்கப்படுகின்றனர். வன்முறையை நேரடியாகக் காட்டாமல், அதன் தாக்கத்தை மட்டும் வெளிப்படுத்துவது அவரது பாணி. பனாஹி, பெண்கள் வீட்டிற்குள் ஹிஜாப் அணிவதைக் காட்சியாகச் சித்திரிக்க மறுக்கிறார். ஈரானின் தெருக்களில் ஹிஜாப் அணிவது சாதாரணமாக இருந்தாலும், எந்த முஸ்லிம் பெண்ணும் வீட்டில் ஹிஜாப் அணிவதில்லை. ஆனால், ஈரானிய அரசு, இயக்குநர்களை வீட்டிற்குள் பெண்கள் ஹிஜாப் அணிவதைச் சித்திரிக்கக் கட்டாயப்படுத்துகிறது. அதை தன்னால் செய்ய இயலாது என்கிறார்.

2022 ஜூலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் குழுவின் போராட்டங்களுடன் தொடர்பு வைத்ததாக பனாஹி மீண்டும் கைது செய்யப்பட்டார். தெஹ்ரானின் புகழ்பெற்ற எவின் சிறையில் அடைக்கப்பட்டார். ஏழு மாதங்களுக்குப் பிறகு, உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து விடுவிக்கப்பட்டார். இந்த அனுபவமே 'It Was Just an Accident' படத்திற்கு அடித்தளமாக அமைந்தது. சக சிறைவாசிகளுடனான உரையாடல்களை உத்வேகமாக எடுத்து திரைக்கதை அமைத்ததாக பனாஹி கூறுகிறார். “ஒரு கலைஞனைச் சிறையில் அடைப்பது, அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்குவதாகும்; புதிய பொருள், யோசனைகள், ஒரு புதிய உலகத்தைத் திறப்பதாகும்,” என்கிறார்.
ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை எதிர்க்கும் முக்காடு அணியாத பெண் கதாபாத்திரங்களைத் துணிச்சலுடன் சித்திரித்த இந்தப் படம், முன்னாள் சிறைவாசிகளின் வாழ்க்கையையும், அவர்களைத் துன்புறுத்தியவர்களிடம் பழிவாங்கும் உளவியல் போராட்டத்தையும் ஆராய்கிறது. “இந்தப் படத்தை அவர்கள் பார்த்தால், கலைஞர்களைச் சிறையில் அடைப்பதை நிறுத்த வேண்டும் என உணரலாம். நாங்கள் இவ்வளவு கிளர்ச்சியாக இருப்பதைத் தடுக்க வேண்டுமெனில், எங்களைச் சிறையில் அடைப்பதை நிறுத்த வேண்டும்,” என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் ஜாஃபர் பனாஹி.

பல தசாப்தங்களாக தணிக்கை, துஷ்பிரயோகம், மற்றும் உத்தியோகபூர்வ தடைகள் இருந்தபோதிலும், பனாஹியின் உறுதி ஒருபோதும் தளரவில்லை. “எனது 20 ஆண்டு தடையின்போது, எனது நெருங்கிய நண்பர்கள் கூட நான் மீண்டும் திரைப்படம் எடுப்பேன் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால் நான் தீர்வுகளைத் தேடினேன். எனக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாது. ஒரு மின்விளக்கை மாற்றத் தெரியாது. ஒரு ஸ்க்ரூடிரைவரைப் பயன்படுத்தத் தெரியாது. எனக்குத் திரைப்படம் எடுப்பது மட்டுமே தெரியும்,” என்று கூறிய பனாஹி, கான் திரைப்பட விழாவிற்குப் பிறகு, உள்ளூர் ஆபத்துகள் இருந்தபோதிலும், ஈரானுக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
"தங்களின் முதல் படங்களை எடுக்கும் இளைஞர்கள் அரசாங்கம் சொல்வதையெல்லாம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; தணிக்கையாளர்கள் தங்கள் படங்களைச் சிதைக்க அனுமதிக்கிறார்கள். நாங்கள் தணிக்கையாளர்களை எதிர்க்கவில்லை என்றால், இளம் திரைப்பட இயக்குநர்களுக்கு நிலைமை மோசமாகிவிடும். எதிர்ப்பின் அடையாளமாக இருக்கும் சினிமா தொடராது; அது அடக்கப்பட்டு, இப்போது படம் எடுக்கும் சில நபர்களுடன் முடிந்துவிடும். நாங்கள் எதிர்க்கவில்லை என்றால், புதிய திரைப்பட இயக்குநர்களுக்கான பாதை தடுக்கப்படும், எனவே அடுத்த தலைமுறையின் பார்வையில் நாங்கள் பொறுப்பாளிகளாக இருப்போம். இதைத் தொடர்ந்து செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை."

சினிமா உலகுக்கான ஒரு ஜன்னல், அந்த ஜன்னலை மூட யாருக்கும் உரிமை இல்லை. ஜாஃபர் பனாஹி, தன் படைப்புகளின் துணிச்சலான பார்வை மற்றும் சமூக உணர்வு ஆகியவற்றின் மூலம், ஈரானிய சினிமாவை உலக அரங்கில் நிலை நிறுத்தியிருக்கிறார். ஒரு கலைஞனின் உள்ளத்தில் உண்மை பற்றி எரியும் வரை, எந்த சிறையும், எந்த தடையும் அந்த உண்மையையும் அடக்க முடியாது என்பதற்கு வாழும் உதாரணம் `ஜாஃபர் பனாஹி'.