டீம் சேர்க்கும் செங்கோட்டையன், நீக்கும் முடிவில் EPS? | Elangovan Explains
North Korea: முதன்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்ட கிம் ஜாங் உன் மகள் - இவர்தான் அடுத்த அதிபரா?
சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றுள்ள வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அவருடைய மகளான ஜூ ஏ (Kim Ju Ae)-வை முதன்முறையாக வெளிநாட்டு பயணத்துக்கு அழைத்து வந்துள்ளார்.
ஏற்கெனவே ஜூ ஏ, கிம் ஜாங் உன்னின் அரசியல் வாரிசாகவும் அடுத்த ஆட்சியாளராகவும் திகழ்வார் எனக் கூறப்பட்டு வந்ததை வலுப்படுத்தும் வகையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

பியோங்யாங் நகரிலிருந்து குண்டுதுளைக்காத கவச ரயிலில் பெய்ஜிங்கில் வந்திறங்கினர் கிம் ஜாங் உன்னும் அவரது மகளும்.
ஜூ ஏவின் அடையாளம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிலையில் இருந்தாலும், தென்கொரிய உளவுத்துறை அதிகாரிகள் அவர் 13 வயதாகும் கிம்மின் மகள் எனக் கூறுகின்றனர்.
அமெரிக்காவின் முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரம் டென்னிஸ் ரோட்மேன் வடகொரியா சென்றபோது, ஜூ ஏவை குழந்தையாகப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
கிம் வம்சத்தில் இதுவரை பெண்கள் ஆட்சி செய்ததில்லை என்றாலும், ஜூ ஏ அடுத்த வாரிசாக இருப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
யார் இந்த Kim Ju Ae?
2022 ஆம் ஆண்டில் சக்திவாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில், ஜூ ஏ முதன்முறையாக தனது தந்தையுடன் பொதுவெளியில் தோன்றினார்.

அதுவரை கிம் ஜாங் உன்னின் குடும்பம் மற்றும் குழந்தைகள் குறித்து மிகக் குறைந்த தகவல்களே பொதுவெளியில் கசிந்திருந்ததால், ஜூ ஏ பொதுவெளியில் தோன்றியது மிகவும் அசாதாரணமாகக் கருதப்பட்டது.
அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்தில் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
அன்று முதல் பல முக்கிய ராஜதந்திர நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. கடந்த மாதம் நடைபெற்ற ரஷ்ய தூதரக விழாவிலும் அவர் காணப்பட்டார். வடகொரியாவில் அவரது உருவத்துடன் தபால் தலைகள் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.
பிபிசி ஊடகம் கூறுவதன்படி, பல உயர்மட்ட அதிகாரிகளுடன் விருந்துகளில் கலந்து கொண்டுள்ளார் ஜூ ஏ. அங்கு, கிம் ஜாங் உன்னின் ‘மரியாதைக்குரிய மகள்’ என அழைக்கப்பட்டுள்ளார்.
வடகொரியாவில் ‘மரியாதைக்குரிய’ என்ற அடைமொழி அதி உயர்ந்த அதிகாரிகளுக்கே வழங்கப்படும். உதாரணமாக, கிம் ஜாங் உன் ‘மரியாதைக்குரிய தோழர்’ என அழைக்கப்படுகிறார்.

ஏபி செய்திதளத்தின் அறிக்கையின்படி, ஜூ ஏவுக்கு குதிரைசவாரி, பனிச்சறுக்கு மற்றும் நீச்சலில் விருப்பம் உள்ளது. அவர் வீட்டிலிருந்தபடியே சிறந்த கல்வியாளர்களால் கற்பிக்கப்பட்டு வருகிறார்.
இரண்டாம் உலகப்போர் முடிவில் வடகொரியா உருவாக்கப்பட்டதிலிருந்து கிம் வம்சத்தினரே ஆட்சி செய்து வருகின்றனர். கிம் வம்சத்தினர் ‘புனித ரத்தம் உடையவர்கள்’ என்றும், அவர்களே ஆட்சி செய்யத் தகுதியானவர்கள் என்றும் வலியுறுத்தப்படுவதாக செய்திகள் கூறுகின்றன.

2023ஆம் ஆண்டில், ஜூ ஏவின் பெயரை நாட்டில் வேறு எந்த பெண்ணுக்கும் சூட்டக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அந்தப் பெயரை ஏற்கனவே கொண்டிருப்பவர்கள் தங்களது பெயரை மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஜூ ஏ மட்டுமே பொதுவெளியில் காட்சிப்படுத்தப்படுவதால், இவரே அடுத்த ஆட்சியாளர் என அனைவரும் நம்புகின்றனர்.