தர்மபுரி: பள்ளி மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொன்ன தலைமை ஆசிரியர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாவேரிப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணிபுரியும் கலைவாணி என்பவர் பள்ளி நேரத்தில் மேசையின் மீது படுத்துக் கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளை கை கால்களை அமுக்கி விடச் சொல்லும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில் அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார், வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் வட்டாட்சியர் பெருமாள், வருவாய் ஆய்வாளர் சத்தியபிரியா ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியை மற்றும் மாணவ, மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது, ஆசிரியை கலைவாணி என்பவர் தினமும் மாணவ, மாணவிகளை கை, கால்களை அமுக்கி விடச் சொல்வதாகவும், பெற்றோரிடம் சொல்லக்கூடாது என மாணவிகளை மிரட்டுவதாகவும் தெரியவந்தது.
உடனடியாக மாவேரிப்பட்டி கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி பணியிடமாற்றம் செய்து அரூர் மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைப் பணியிடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.