Afghanistan Earthquake: 9 பேர் பலி; 25 பேர் படுகாயம்; ஆப்கானிஸ்தானை நள்ளிரவு உலு...
ராமோன் மகசேசே விருது: சமூக சேவைக்கான விருதைப் பெறும் NGO; Educate Girls அமைப்பின் சாதனைகள் என்னென்ன?
ஆசியாவின் மிக உயரிய குடிமைப்பணி மற்றும் சமூக சேவைக்கான விருதாகக் கருதப்படும் ராமோன் மகசேசே விருதைப் பெறும் முதல் இந்திய NGO என்ற பெருமையைப் பெற்றுள்ளது 'Educate Girls' என்ற அமைப்பு.
இது தொலைதூர கிராமங்களில் பள்ளி செல்லாத சிறுமிகளுக்காக சஃபீனா ஹுசைன் என்பவரால் நிறுவப்பட்டது. தற்போது 52 வயதாகும் இவர், 2007ம் ஆண்டு ராஜஸ்தானில் இந்த அமைப்பைத் தோற்றுவித்தார்.
ஹுசைன் லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸில் பட்டம் பெற்றார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் பணியாற்றியவர், 2005ம் ஆண்டு பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கோடு இந்தியா திரும்பினார்.
இவரது அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி வழங்குவதன் மூலம் கலாசார கட்டமைப்புகளை உடைத்து, அறியாமையிலிருந்து விடுதலை அளித்து, அவர்களுக்குள் திறமை, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்து, அவர்களின் முழு மனித ஆற்றலை வெளிக்கொணர அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக ராமோன் மகசேசே அறக்கட்டளை கூறியுள்ளது.

Educate Girls அமைப்பு மிகவும் பின்தங்கிய பின்னணியிலிருந்து பள்ளியில் படிக்க வாய்ப்பு கிடைக்காத, இடைநின்ற மாணவிகளைத் தேர்ந்தெடுத்து அவர்கள் சொந்தமாக உயர்படிப்பைத் தொடரும் வரை அல்லது நல்ல வேலைவாய்ப்பை அடையும் வரை உதவி செய்துவருகிறது.
2015ம் ஆண்டு Educate Girls அமைப்பு, கல்வியில் உலகின் முதல் மேம்பாட்டுத் தாக்கப் பத்திரம் (DIB) உருவாக்கியது. அதன் மூலம் 2,00,000 பெண் குழந்தைகள் பலனடையும் வகையில் வெற்றியும் பெற்றது.
இத்துடன் பிரகதி என்ற திட்டத்தையும் செயல்படுத்தியது. இந்தத் திட்டம் 15 முதல் 29 வயது வரையிலான பெண்கள் பள்ளிக்கல்வியை முடிக்க உதவியது. இதன் முதல் தொகுதியில் 300 பேர் பலனடைந்தனர். தற்போது 31,500க்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.
தங்கள் அமைப்பு ஆசியாவின் மிக உயரிய விருதைப் பெறுவது குறித்து சஃபீனா ஹுசைன், "இது Educate Girls-க்கும் நம் நாட்டிற்கும் ஒரு வரலாற்று தருணம்" எனக் கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து ராமோன் மகசேசே விருது பெற்றவர்கள்
முன்னதாக இந்தியாவிலிருந்து தனி நபர்கள், ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படும் ரமோன் மகசேசே விருதைப் பெற்றிருக்கின்றனர்.
சமூக சேவகர் அன்னை தெரசா (1962), அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண் (1965), திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே (1967), பத்திரிகையாளர் ரவிஷ் குமார் (2019), சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் (2018), அரசியல்வாதி அரவிந்த் கெஜ்ரிவால் (2006), தகவல் அறியும் உரிமை ஆர்வலர் அருணா ராய் (2000), முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி (1994) மற்றும் பத்திரிகையாளர் அருண் ஷோரி (1982) ஆகியோருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது.