RCB : 'இது ஒரு வித்தியாச அணி!' - ஆர்சிபியை இறுதிப்போட்டியில் நிறுத்திய அந்த 3 விஷயங்கள்!.
'இறுதிப்போட்டியில் பெங்களூரு!'
ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2016 சீசனுக்குப் பிறகு பெங்களூரு அணி ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது. இதுவரை இருந்த அணிகளை விட இந்த பெங்களூரு அணி கொஞ்சம் வித்தியாசமானது. இந்த அணி எப்படி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது? இறுதிப்போட்டியை எட்ட இந்த அணியின் என்னென்ன அம்சங்களெல்லாம் காரணமாக இருந்தது?
அணிக்கட்டமைப்பும் திட்டமிடலும்!
பெங்களூரு அணி எப்போதுமே ஒரு சில குறிப்பிட்ட வீரர்களை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் அணியாக இருக்கும். அவர்கள் மீது மட்டுமே அதிகமாக முதலீடு செய்தும் வைத்திருக்கும். விராட் கோலி, ஏபிடி, கெய்ல் என இதற்கு உதாரணங்களை அடுக்கலாம். குறிப்பிட்ட அந்த வீரர்கள் சொதப்பினால் அணியும் சொதப்பிவிடும்.
விராட் கோலி 900 ரன்களுக்கு மேல் எடுத்த சீசனில் கூட பெங்களூரு அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் போனதற்கு இதுதான் காரணம். அவர் மட்டும் பெர்பார்ம் செய்தால் போதுமா? இல்லை அவரைப் போல ஒன்றிரண்டு வீரர்கள் பெர்பார்ம் செய்தால் போதுமா? கண்டிப்பாக போதாது. ஒரு அணியாக பெர்பார்ம் செய்ய வேண்டும். இதை பெங்களூரு அணி தாமதமாகத்தான் புரிந்துகொண்டது.

2020 க்குப் பிறகே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மெருகேறி மெருகேறி இப்போது முழுமையான ஒரு அணியாக மாறியிருக்கின்றனர். பேட்டிங்கில் இவர் மட்டும்தான் என்றில்லாமல் ஒரு நான்கைந்து வீரர்கள் வலுவாக இருக்கின்றனர். பௌலிங்கிலும் அப்படித்தான். கோலியை தாண்டியும் மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். ரஜத் பட்டிதர் ஒரு போட்டியை வென்று கொடுக்கிறார். ஜித்தேஷ் சர்மா ஒரு போட்டியை வென்று கொடுக்கிறார். ஏன் ரொமாரியோ ஷெப்பர்ட்டே ஒரு போட்டியை வென்று கொடுத்திருக்கிறார்.
இப்படி இந்த சீசன் முழுக்க 9 வெவ்வேறு வீரர்கள் ஆர்சிபிக்காக ஆட்டநாயகன் விருதை வென்றிருக்கின்றனர். இதைவிட முக்கியமான விஷயம் அந்த அணி ஆடிய Away போட்டிகள் எல்லாவற்றையும் வென்றிருக்கிறது. ஐ.பி.எல் வரலாற்றிலேயே எந்த அணியும் செய்யாத சாதனை இது. சின்னசாமி மைதானம் தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை உணர்ந்து, எல்லா மைதானங்களுக்கும் ஏற்ற வகையில் ஒரு மினிமம் கேரண்டி அணியை ஏலத்தில் அள்ளி வந்ததில் பெங்களூரு சிக்சர் அடித்துவிட்டது.

விராட் கோலி:
பெங்களூரு அணி பாசிட்டிவ்வான அட்டாக்கிங் கிரிக்கெட் ஆடுகிறது. பெரும்பாலான அணிகள் இப்படித்தான் ஆடுகின்றன. ஆனால், இப்படி ஆடுவதில் ஒரு பெரிய பின்னடைவும் இருக்கிறது. திடீரென ஒரு போட்டியில் எல்லாருமே அடிக்க முற்பட்டு வேகவேகமாக அவுட் ஆகி மொத்தமாக சொதப்பி விடுவார்கள். அப்படி நடக்கக்கூடாதெனில் சூழலை உணர்ந்து ஆடும் ஒரு அச்சாரமான பேட்டர் தேவை. அவரைச் சுற்றி அந்த அணியின் பேட்டிங் ஆர்டர் கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

பெங்களூருவில் அப்படி ஒரு பேட்டராக கோலியே இருக்கிறார். கோலியும் மற்ற வீரர்களுடன் இணைந்து அட்டாக்கிங் கிரிக்கெட்தான் ஆடுகிறார். ஆனால், தேவைப்படும்பட்சத்தில் கடினமான சூழல்களில் ஒரு முனையில் நின்று செகண்ட் பிடிலும் ஆடுகிறார். இப்படியொரு அனுபவமிக்க பக்குவமான இன்னும் பார்மில் இருக்கக்கூடிய சூப்பர் ஸ்டார் வீரர் பல அணிகளில் இல்லை. இந்த சீசனில் மட்டும் 614 ரன்களை எடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக மூன்றாவது சீசனாக 600 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும், கோலிக்காக வெல்ல வேண்டும் என்பதே பெங்களூரு அணிக்கான உத்வேகமாகவும் மாறியிருக்கிறது.
திடமான பௌலிங்:
பெங்களூரு அணி எப்போதும் பௌலிங்கில்தான் கோட்டைவிடும். பேட்டர்கள் எவ்வளவு ரன்களை எடுத்திருந்தாலும் பௌலர்கள் அதை வாரிக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இந்தப் போக்கும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த சீசனையே எடுத்துக் கொள்ளுங்கள். ஹேசல்வுட் அவர்களின் மேட்ச் வின்னிங் பௌலராக இருக்கிறார். இடையில் அவருக்கு காயம் ஏற்பட்டு சில போட்டிகளை தவறவிட்டார். அப்போதும் கூட அந்த அணி தடுமாறவில்லையே?

புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், க்ரூணால் பாண்ட்யா, சுயாஷ் சர்மா என எல்லாருமே நல்ல பார்மில் இருக்கிறார்கள். எல்லாருமே அவரவர் பங்குக்கு போட்டிகளை வென்றும் கொடுத்திருக்கிறார்கள். ஆர்சிபி முன்பைப் போல இல்லை என்பதற்கு இதுவும் முக்கிய காரணம். முன்பிருந்த ஆர்சிபியிடம் இப்படி வலுவான பௌலிங் படை இருந்திருக்கவில்லை.

ஒரு அணியாக முழுமையாக நிறைவான செயல்பாட்டை ஆர்சிபி அணி கொடுத்து வருகிறது. ரஜத் பட்டிதர் அறிமுக கேப்டனாக இருந்தாலும் எந்த பதற்றமும் இல்லாமல் அணியை வழிநடத்தி அசத்தியிருக்கிறார். இத்தனை ஆண்டுகள் ஏக்கமாக இருந்த அந்த கோப்பையை கையில் எந்த இன்னும் ஒரு படிதான் மிச்சமிருக்கிறது. ஆர்சிபி என்ன செய்கிறதென்பதை பொறுத்திருந்துப் பார்ப்போம்.