முஸதபாபாத் சம்பவத்தில் உயிரிழந்த, காயமடைந்தவா்களின் குடும்பங்களுக்கு அரசு இழப்பீ...
Rohit Sharma : '6 போட்டிகளில் 82 ரன்கள் மட்டுமே...' - எப்போதான் ரன் அடிப்பீங்க ஹிட் மேன்?
'தடுமாறும் ரோஹித்!'
மும்பை இந்தியன்ஸ் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்தது. இப்போது தொடர்ச்சியாக அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை வென்று கம்பேக் கொடுத்திருக்கிறது. ஆனால், அந்த அணியின் முக்கிய வீரரான ரோஹித் சர்மா இன்னும் கம்பேக் கொடுக்கவில்லை. தொடர்ந்து மிக மோசமாக ஆடிக் கொண்டிருக்கிறார்.

'பின்னணி!'
ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா 16 பந்துகளில் 26 ரன்களை அடித்திருந்தார். இதுதான் நடப்பு சீசனில் ரோஹித் சர்மா அடித்திருக்கும் அதிகபட்ச ஸ்கோர். இதுவரை மும்பை அணி 7 போட்டிகளில் ஆடியிருக்கிறது. இதில் ரோஹித் சர்மா 6 போட்டிகளில் ஆடியிருக்கிறார். இந்த 6 போட்டிகளில் மொத்தமாக சேர்த்தே 82 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார். ஆவரேஜ் 13 தான்.
'நீண்ட நாள் பிரச்னை!'
இந்த சீசனில் மட்டுமில்லை. ரோஹித் சர்மா கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.பி.எல் இல் சுமாராகத்தான் ஆடியிருக்கிறார். 2020 லிருந்து இப்போது வரைக்கும் 6 சீசன்களிலும் சேர்த்தே மொத்தமாக 7 அரைசதங்களைத்தான் அடித்திருந்தார். மும்பை அணி கடுமையாகச் சொதப்பிய கடந்த சீசனில் ரோஹித் கொஞ்சம் பரவாயில்லாமல் அடித்திருந்தார். ஒரு சதத்தையும் ஒரு அரைசதத்தையும் அடித்திருந்தார்.

சீசன் மொத்தமாக சேர்த்து 417 ரன்களை அடித்திருந்தார். கடந்த 6 சீசன்களில் இந்த 2024 சீசனைத் தவிர வேறு எந்த சீசனிலும் ரோஹித் 400+ ரன்களை கடக்கவில்லை. ஐ.பி.எல் இல் விராட் கோலியின் பார்ம் அடிக்கடி கேள்விக்குள்ளாகும். ஆனால், அவரைவிட ரோஹித்தான் தொடர்ந்து சீராக மோசமாக ஆடியிருப்பார். காரணம், கேப்டனாக ரோஹித் சர்மா நல்ல பெர்பார்ம் செய்து வந்தார்.
ரோஹித் தலைமையில் 5 கோப்பையை அந்த அணி வென்றிருந்தது. அதனால் தனிப்பட்ட முறையில் ஒரு பேட்டராக ரோஹித்தின் குறைபாடுகள் அவ்வளவாக வெளியில் தெரியவில்லை. ஆனால், இப்போது ரோஹித் கேப்டனாக இல்லை. பல போட்டிகளில் இம்பாக்ட் ப்ளேயராக பேட்டராக மட்டுமே வருகிறார். அதனால் தனிப்பட்ட முறையில் அவரது பேட்டிங்கும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்படி பார்க்கையில் ரோஹித் நடப்பு சீசனில் மிக மோசமாகவே ஆடி வருகிறார்.
'ரோஹித்தின் அணுகுமுறை!'
ரோஹித் ஆட நினைக்கும் விதத்தையும் இங்கே நாம் கருத்தில் கொள்ளவேண்டும். விராட் கோலியைப் போல நின்று பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டும் அல்லது ஆங்கர் இன்னிங்ஸ் ஆட வேண்டும் என்பது ரோஹித்தின் எண்ணம் இல்லை. பவர்ப்ளேக்குள் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் அதிரடியாக ஆடி விட வேண்டும் என நினைக்கிறார். மும்பை அணியின் பேட்டிங் ஆர்டர் நீளமானது.

அதனால் டாப்பில் ரோஹித் இப்படி ரிஸ்க் எடுத்து ஆடுவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், அதுவும் க்ளிக் ஆகவில்லை என்பதே பிரச்சனை. அவர் எதிர்பார்க்கும் விதத்திலான தாக்கத்தை நேர்மறையாக அவரால் கொடுக்க முடியவில்லை. அதனால்தான் ரோஹித்தின் ஆட்ட முறையை கொஞ்சம் மாற்றினால் சரியாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
நடப்பு சீசனில் 6 இன்னிங்ஸ்களில் 3 இன்னிங்ஸ்களில் மட்டுமே 10 பந்துகளுக்கு மேல் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானத்தை கடைபிடித்து 10 பந்துகளை பார்த்து ஆடிவிட்டு அதன்பிறகு கியரை மாற்றினால் ரோஹித்தால் கட்டாயம் பெரிய இன்னிங்ஸ்களை ஆட முடியும். மேலும், இப்போதைய சூழலுக்கு ஓப்பனர்களுக்கு மட்டும்தான் அந்த முதல் 10 பந்துகளை பார்த்து ஆடும் சௌகர்யம் இருக்கிறது.
அதை ரோஹித் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரோஹித் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் ஒவ்வொரு மாதிரியாக அவுட் ஆகிறார். ஒரு குறிப்பிட்ட பேட்டர்னில் அவுட் ஆகவில்லை என்பதும் பாசிட்டிவ்வான விஷயம்தான். ஆக, அவர் முதல் 10 பந்துகளை பார்த்து ஆடினாலே அவரின் பிரச்சனை சரியாகக்கூடும்.

ரோஹித் பார்முக்கு வர வேண்டியது கட்டாயமும் கூட. கேப்டனாக இல்லாத ரோஹித்தை, பேட்டராக மட்டுமே ஆட வேண்டுமெனில் அவர் பார்மில் இருக்க வேண்டும். பார்மில் இல்லாத ரோஹித்தை நீண்ட நாட்களுக்கு லெவனில் வைத்திருக்க ஹர்திக் விரும்பமாட்டார். இதையெல்லாம் மனதில் வைத்து சீக்கிரமே ரன் அடிங்க ஹிட்மேன்!