Siragadikka aasai : ரோகிணி எஸ்கேப், ஆனால் ஸ்ருதி எங்கே?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி தான் முத்துவின் மொபைலை திருடி சிட்டியிடம் கொடுத்து வீடியோவை வெளியே விட உதவினார் என்னும் விஷயம், வீட்டில் அனைவருக்கும் தெரிய வரப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் புதிய ட்விஸ்ட்டாக ஸ்ருதி காணாமல் போய்விட்டார்.
ரவி-ஸ்ருதி தங்களின் முதல் திருமண நாளை பிரமாண்டமாக கொண்டாடத் திட்டமிடுகின்றனர். வீட்டில் உள்ள அனைவரிடமும் இதனைச் சொல்லி, இன்விட்டேஷன் தயார் செய்கின்றனர். அதில் குடும்பத்தில் இருக்கும் அனைவரது பெயரும் குறிப்பிடப்பட்டதை பார்த்து அனைவரும் மகிழ்கின்றனர்.
இதனிடையே முத்துவுக்கு செருப்பு தைக்கும் தாத்தா வீட்டில் இருந்து போன் வருகிறது. தாத்தாவின் கடையில் போனை தவறவிட்டது வித்யா தான் என புகைப்படத்தை பார்த்து தாத்தா அடையாளம் காட்டியதாகச் சொல்கிறார்கள். முத்து அதிர்ந்து போகிறார்.
மீனாவை தனியாக அழைத்து இந்த விஷயத்தை சொல்ல மீனா வருந்துகிறார். `எப்படி இவ்ளோ வன்மமா இருக்காங்க?’ என்று ரோகிணியைக் குறிப்பிட்டு மீனா கடிந்து கொள்கிறார்.
முத்து தெளிவாக என்ன நடந்தது என்பதை யூகித்துவிட்டார். மனோஜ் கடையின் பார்ட்டியின் போது முத்துவிடம் இருந்து ரோகிணி மொபைலை திருடி, வித்யாவிடம் கொடுத்து வைத்திருக்கிறார், வீடியோவை சிட்டிக்கு அனுப்பி வைக்கிறார் என சரியாக யூகிக்கிறார்.
ஆனால் அவரிடம் அதனை நிரூபிக்க ஆதாரம் இல்லை. வித்யாவின் வீட்டிற்கு சென்று நேரடியாக கேட்கிறார் முத்து, ஆனால் வழக்கம்போல வித்யா எதை எதையோ சொல்லி சமாளித்துவிடுகிறார். ஆனால் முத்து இதனை நம்பாமல் உண்மையை வெளியே கொண்டு வருவேன் என்று சொல்லி கிளம்புகிறார். வீட்டிற்கு வந்ததும் மீனாவிடம் நடந்ததை சொல்ல, அதனை ரோகிணி ஒளிந்து நின்று கேட்டு நிம்மதியாகிறார். நல்லவேளை வித்யா எந்த உண்மையும் சொல்லல என்று பெருமூச்சு விடுகிறார் ரோகிணி.
இன்று வெளியான ப்ரோமோவில் ரவி-ஸ்ருதி முதல் திருமண நாள் கொண்டாட்ட நிகழ்வில் ஸ்ருதி வரவில்லை. அனைவரும் வந்துவிட்டனர். ஆனால் ஸ்ருதி மட்டும் காணாமல் போகிறார். மீனா ஸ்ருதியின் டப்பிங் ஸ்டூடியோவிற்கு சென்று பார்க்க, அங்கு ஸ்ருதி வரவேயில்லை என்கின்றனர். இதனால் ரவி பயந்து போகிறார்.
மற்றொருபுறம் ஸ்ருதி அப்பாவும் அம்மாவும் ரவியை மிரட்டுகின்றனர். ஸ்ருதிக்கு ஏதோ பிரச்னை என்று அவர்கள் கோபப்படுகின்றனர். ஸ்ருதிக்கும் ரவிக்கும் என்னவானது? ஸ்ருதி எங்கே சென்றார்? ரோகிணி எப்போது தான் மாட்டுவார் என திங்கள்கிழமை தெரியவரும்.