TASMAC : `ரூ.50,000 கோடியை நெருங்கும் வருவாய்; 2024-25 ஆண்டில் அதிகரிப்பு’ - வெளியான டாஸ்மாக் தகவல்
தற்போது தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2024 - 25 நிதியாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ.2,488.30 கோடி அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.48,344 கோடி ஆகும்.
2023 - 24 -ம் நிதியாண்டில் டாஸ்மாக் நிறுவனத்தின் மொத்த வருமானம் 45,855.70 கோடி ஆகும்.
இதனிடையே, டாஸ்மாக் நிறுவனத்தில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்படுகிறது என்றுக்கூறி அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி பேச்சு
வெளிநடப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் நிறுவனத்தின் மீது பல்வேறு இடங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல டாஸ்மாக் சார்ந்த நிறுவனங்களில் ஆய்வு நடத்தினார்கள்.
கூடவே, மதுபானம் தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதுக்குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டது. ஆனால், இதுவரை இந்த சம்பவம் குறித்து முதல் அமைச்சர் உட்பட யாரும் பேசவில்லை.
இதுக்குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுவர முயற்சித்தேன். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது.
அமலாக்கத்துறையில் ரெய்டு
ரூ.1000 கோடி ஊழல் என்ற குற்றச்சாட்டை அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதுக்குறித்த முழுமையான விளக்கம் இன்னும் கிடைக்கவில்லை.
நான் கேள்வி கேட்க முயற்சித்தப்போது, இதுக்குறித்து பேச கட்டாயம் அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். இதற்கு பொருள் ரூ.1000 கோடி ஊழலில் அரசுக்கு சம்பந்தம் உள்ளது என்பது தான்.

ஆண்டுக்கு ரூ.5,400 கோடி
டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூல் செய்கின்றன. ஒரு நாளைக்கு 1.5 கோடி பாட்டில்கள் விற்பனையாகிறது. ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் வருமானம். ஒரு மாதத்திற்கு 450 கோடி ரூபாய் ஆகும். ஒரு ஆண்டிற்கு ரூ.5,400 கோடி.
இதுக்குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் 'நாங்கள் மட்டும் இதை வசூலிக்கவில்லை... அதிகாரிகளுக்கும் தருகிறோம்' என்று கூறியுள்ளார்கள்" என்று பேசியுள்ளனர்.