Tesla: `இந்தியாவில் EV கார்களைத் தயாரிக்க டெஸ்லாவுக்கு ஆர்வமில்லை' - மத்திய அமைச்சர் ஓப்பன் டாக்
உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற நிதியை அள்ளிக்கொடுத்தவருமான எலான் மாஸ்க்கின் டெஸ்லா (Tesla) நிறுவனம், இந்தியாவில் இன்னும் தங்களின் மின்சார கார்கள் விற்பனையைத் தொடங்கவில்லை.
அதற்கு முக்கிய காரணமாக, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது கார்களை விற்பனை செய்ய மட்டுமே தயாராக இருப்பதாகவும், இந்தியாவில் உற்பத்தி செய்யத் தயாராக இல்லை என கூறப்படுகிறது.

இவ்வாறான சூழலில்தான், கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் தனது முதல் ஐந்தாண்டு குத்தகை ஒப்பந்தத்தை டெஸ்லா இறுதி செய்தது.
ஒப்பந்தத்தின்படி முதல் வருடத்திற்கு சுமார் 4,46,000 டாலர் வருடாந்திர வாடகை என டெஸ்லா உறுதியளித்தது.
மேலும், இறக்குமதி செய்யப்பட்ட மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்காக மும்பையில் ஒரு ஷோரூம் இடத்தைப் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், "டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களைத் தயாரிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. மாறாக இங்கு ஷோரூம்களை அமைப்பதில் மட்டுமே ஆர்வமாக இருக்கிறது" என மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் ஹெச்.டி. குமாரசாமி நேற்று (ஜூன் 2) தெரிவித்திருக்கிறார்.
மேலும், "மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை அரசு இறுதி செய்திருக்கிறது.
மின்சார கார்கள் உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தத் திட்டத்தைப் பெற மெர்சிடிஸ் பென்ஸ், ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன், ஹுண்டாய், கியா ஆகிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டியிருக்கின்றன." என்றும் குமாரசாமி அறிவித்திருக்கிறார்.

அதன்படி, இத்திட்டத்தின் கீழ் நிறுவனங்கள் சலுகைகள் பெறவேண்டுமானால், `(1) மின்சார கார்கள் மூன்று ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். (2) அவை மூன்று ஆண்டுகளில் குறைந்தது 25 சதவிகிதம் மேக் இன் இந்தியாவாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 50 சதவிகிதம் மேக் இன் இந்தியாவாகவும் இருக்க வேண்டும்.' என்ற இரண்டு கட்டாய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை எதிர்த்து வரும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் தயாரிக்காமல் இந்தியா அல்லது வேறு நாட்டில் தயாரித்தால் 25 சதவிகிதம் வரி கட்ட வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனத்துக்கு கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.