தில்லியில் பிரசாரம் நிறைவு! மும்முனைப் போட்டியில் வெல்வது யார்?
TVK: ``2026 -ல் பண்ணையார் மனநிலையை தவெக அப்புறப்படுத்தும்!'' -ஆதவ் அர்ஜூனா
முன்னாள் முதல்வர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு தவெக கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், '1967 -ல் அண்ணா பண்ணையார்களின் ஆதிக்கத்தை ஒழித்ததை போல 2026 -ல் தவெக பண்ணையார் மனநிலையை ஒழிக்கும்.' எனக் கூறியிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையாவது, 'இந்தியாவில் தேசியக் கட்சி ஒற்றை ஆதிக்கத்தை எதிர்த்து நின்று வெற்றிகண்டவர். இளைஞர் படையின் துணையோடு முதன்முதலாக மாநிலக் கட்சித் தலைமையிலான ஆட்சியை உருவாக்கியவர். மாநில சுயாட்சியின் நாயகர். இருமொழிக் கொள்கையின் சிற்பி. பண்ணையார் அரசியலை ஒழித்து, சாமானிய அரசியலை நிறுவிய மக்கள் தலைவர். இன்றுவரை, தமிழ்நாடு அரசியலின் திசைவழியாக இருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றுவோம்.
1967-ம் ஆண்டு அண்ணா அடைந்த மகத்தான வெற்றி பண்ணையார் ஆதிக்கத்தைத் தகர்த்த அந்த வரலாற்று நிகழ்வைப் போல, இன்றைய பண்ணையார் மனநிலை ஆதிக்கத்தை நம்மண்ணிலிருந்து அப்புறப்படுத்தி, அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2026-ம் ஆண்டு சாமானிய-எளிய மக்களுக்கான ஆட்சியைத் தமிழக வெற்றிக் கழகம் அளித்து புதிய வரலாற்றைப் படைக்கும்.
அண்ணாவின் அறிவுரையான “மக்களிடம் செல், அவர்களுடன் வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்களை நேசி” என்கிற வழியில், நம் தலைவர் சுட்டிக்காட்டியது போல ‘மக்களோடு சேர்ந்து, மக்களோடு மக்களாகத் தொடர்ந்து உழைத்து’ ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். அதற்கான சூழல் இப்போது நமக்கு அமைந்துள்ளது. அண்ணாவின் நினைவுநாளில், அந்த சூளுரையையே நம் வெற்றிப் பயணத்திற்கான உறுதியாக ஏற்றுப் பயணிப்போம்!' எனக் கூறியிருக்கிறார்