USA: 30 ஆண்டுகள் வசித்த 73 வயது மூதாட்டியை கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு
அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்துவது அதிகரித்து இருக்கிறது.
அவர்களை மிகவும் கொடூரமான முறையில் கை, காலில் விலங்கிட்டு நாடு கடத்தப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
புதிதாக இந்தியாவைச் சேர்ந்த 73 வயது மூதாட்டி ஒருவரை ட்ரம்ப் அரசு இந்தியாவிற்கு நாடு கடத்தி இருக்கிறது.

பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்ஜித் (73) என்ற பெண் கடந்த 30 ஆண்டுகளாக அமெரிக்காவில் தனது மகனுடன் வசித்து வருகிறார். அவர் போதிய ஆவணங்கள் இல்லாமல் வசித்து வருகிறார் என்பது அமெரிக்க அரசுக்கும் தெரியும்.
1992ஆம் ஆண்டு கவுர் தனது இரண்டு மகன்களுடன் அமெரிக்காவிற்குச் சென்றார். அவர் வடக்கு கலிபோர்னியாவில் வசித்து வந்தார்.
கவுர் தனக்கு அகதி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கோரி அமெரிக்க நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து 6 மாதத்திற்கு ஒரு முறை லாஸ் ஏஞ்சல்சில் உள்ள இமிகிரேசன் மற்றும் சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று அறிக்கை கொடுத்து வந்தார்.
இது குறித்து கவுர் மருமகள் மஜ்சி கவுர் கூறுகையில்,''கடந்த 13 வருடங்களாக 6 மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்க இமிகிரேசன் அலுவலகத்திற்கு சென்று ஆஜராகி வந்தார். அவர் தொடர்ந்து அமெரிக்காவில் வசிக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்கள்.
ஆனால் இப்போது திடீரென ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி வரவழைத்து கைது செய்திருக்கிறார்கள்''என்றார்.
கவுரிடம் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி அமெரிக்க இமிகிரேசன் அதிகாரிகள் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக்கொண்டனர்.

கவுர் அங்கு சென்றபோது அவரைப் பிடித்து முகாமில் அடைத்தனர். அங்கிருந்து எந்த விளக்கமும் கொடுக்காமல் ஜார்ஜியாவில் உள்ள முகாமிற்குக் கொண்டு சென்றனர். அங்கு தனி அறையில் அடைத்து வைத்திருந்தனர். பின்னர் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்திவிட்டனர்.
இது குறித்து கவுர் வழக்கறிஞர் அலுவாலியா கூறுகையில், "கவுர் தனது உடமைகளை எடுத்துக்கொள்ளவோ அல்லது அவர் உறவினர்களிடம் சென்று வருகிறேன் என்று சொல்லி விடைபெறவோ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கவுரைக் கையில் விலங்கிட்டு அழைத்துச்சென்றனர்.

முதலில் பேகர்ஸ்பீல்டு அலுவலகத்திற்குச் சென்ற கவுரை விலங்கிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் அழைத்துச் சென்றனர். அங்கிருந்து சிறப்பு விமானத்தில் ஜார்ஜியா முகாமிற்குக் கொண்டு சென்றனர்.
கவுர் குடும்பத்தினர் அவரை இந்தியாவிற்கு அனுப்பத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்துகொண்டிருந்தனர். அதோடு வழக்கமான பயணிகள் விமானத்தில் அனுப்பும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் கவுர் குடும்பத்தினருடன் சில மணி நேரம் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் அதற்கு அனுமதிக்கவில்லை.
70 மணி நேரம் எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்காமல் அடைத்து வைத்திருந்துவிட்டு நாடு கடத்தி இருக்கின்றனர். அவர் பல முறை அகதி அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்தார். கடைசியாக 2012ஆம் ஆண்டு அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
73 வயதாகும் மூதாட்டியை கைவிலங்கிட்டு நாடு கடத்தி இருப்பது அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கவுர் கைது செய்யப்பட்டவுடன் கவுர் குடும்பத்தினர் அங்குள்ள இந்தியர்களுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து இமிகிரேசன் அதிகாரிகள் கூறுகையில், "ஹர்ஜித் கவுர் மேல்முறையீட்டு நீதிமன்றம் வரை சென்று பல முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார், ஒவ்வொரு முறையும் தோற்றார். இப்போது அவர் அனைத்து சட்டப் போராட்டத்திலும் தோற்றுவிட்டார். எனவே நாங்கள் அமெரிக்க சட்டத்தையும் நீதிபதியின் உத்தரவுகளையும் செயல்படுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.