சஞ்சய் கபூர் சொத்து விவரம்: ``கரிஷ்மா கபூர் பிள்ளைகள் கையெழுத்துப் போட்டால் தான்'' -பிரியா சச்சிதேவ்
ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து
பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் திடீரென லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் இறந்ததால், அவர் விட்டுச்சென்ற சொத்துக்கு கரிஷ்மா கபூர் மற்றும் சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவி இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.
சஞ்சய் கபூரின் மூன்றாவது மனைவி பிரியா சச்சிதேவ் தனது கணவர் இறந்தவுடன் அவரின் ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனியில் தன்னை இயக்குநராக இணைத்துக்கொண்டார்.
அதோடு சஞ்சய் கபூரின் தாயாரிடமும் கையெழுத்து வாங்கிக்கொண்டு சொத்துகள் அனைத்தையும் தனது பெயருக்கு மாற்ற முயல்வதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சஞ்சய் கபூர் இறக்கும்போது உயில் எதுவும் இல்லை என்று பிரியா சச்சிதேவ் தெரிவித்தார். ஆனால் பின்னர் உயில் இருப்பதாகக் கூறினார்.

அந்த உயில் போலியானது என்றும், தங்களது தந்தை எழுதியது கிடையாது என்றும், உயில் விவரங்களைத் தங்களிடம் காட்ட மறுப்பதாகவும் கரிஷ்மா கபூரின் இரண்டு பிள்ளைகளும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இம்மனு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது சஞ்சய் கபூரின் அசையும், அசையா சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
பிரியா சச்சிதேவ் தரப்பு வாதம்
ஆனால் இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பிரியா சச்சிதேவ் தனது கணவரின் சொத்துகள் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
மாறாக கரிஷ்மா கபூரின் பிள்ளைகள் உயிலில் இருக்கும் விவரங்கள், சொத்து விவரங்களை வெளியில் சொல்ல மாட்டோம் என்று ரகசியகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே அவர்களுக்குச் சொத்து விவரங்களைக் கொடுப்பேன் என்று பிரியா சச்சிதேவ் தரப்பில் வாதிடப்பட்டது.
உயிலில் சொத்துகள் தொடர்பான முக்கியமான நிதி விவரங்கள் இருப்பதாகவும், அவற்றை வெளிப்படுத்துவது ஆபத்தை விளைவிக்கும். அனைத்தும் ஊடகங்களில் கசிகிறது. நீதிமன்றத்தில் நடந்ததை வெளியில் சென்று சொல்கிறார்கள். வங்கி கணக்கு விவரங்களை ஏன் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தல் இருக்கிறது.
சொத்து விவரங்களை கொடுக்க நான் தயங்கவில்லை. ஆனால் அவர்கள் ரகசியக் காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்று வாதிட்டார்.

கரிஷ்மா கபூரின் பிள்ளைகள் வாதம்
ஆனால் அவ்வாறு கையெழுத்து போட்டுக்கொடுப்பதன் மூலம் உயிலில் உள்ள பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாமல் போய்விடும் என்று கரிஷ்மா கபூரின் பிள்ளைகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கரிஷ்மா கபூர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,'' சஞ்சய் கபூர் உயிலில் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டார்கள்'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து நாளை உயில் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து தகவல்களும் சீலிடப்பட்டு இருந்தால் நீதிமன்றத்தில் எப்படி வாதாடுவது, எப்படி பதில் மனு தாக்கல் செய்வது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.