அஜித்குமாருக்காக விஜய் போராட்டம்! 10,000 பேருடன் தவெக முதல் போராட்டம்!
சென்னையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் முதல் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சித் தலைவர் விஜயும் கலந்துகொள்ள உள்ளார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் காவல்துறையினரின் அராஜகத்துக்கு எதிராக பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பும் கோரியிருந்தார்.
இதனிடையே, அஜித்குமார் கொலை சம்பவத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து, நாளை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படவுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக-வின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மாநில அளவில் தவெக-வின் முதல் கண்டன ஆர்ப்பாட்டம் என்பதாலும், தலைவர் விஜய் கலந்து கொள்ளவிருப்பதாலும் கட்சித் தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலையில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்கள் உள்பட ரசிகர்களும் இன்றே சென்னை வந்தடைந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும்நிலையில், அதிகளவிலான காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக ஆட்சியேற்றதிலிருந்து, அதாவது கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறையினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியான மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் தவெக தலைவர் விஜய் இன்று பேசவுள்ளார். மேலும், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுவதுடன், அவர்களும் நாளைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு தவெக சார்பில் காவல்துறையில் அனுமதி கோரப்பட்டபோது, அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டது.
இந்த நிலையில், தவெக ஆர்ப்பாட்டம் குறித்து சென்னை காவல் ஆணையர் கூறுகையில், போராட்டத்துக்கு அனுமதி இல்லை என்று நாங்கள் கூறவில்லை. அனுமதி கிடைக்காது என்று அவர்களே நினைத்து விட்டார்கள் எனத் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க:அதிமுக - பாஜக கூட்டணி ஒரு சதித்திட்டம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்