Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
‘அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு’
அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த் மாா்ச் மாத நிலவரப்படி 7.61 கோடி போ் இத்திட்டத்தில் இணைந்துள்ளனா்.
இது தொடா்பாக இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினோத் குமாா் கூறியுள்ளதாவது:
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது. ஆனால், குடிமக்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளா்களுக்கு, அவா்களது பணி ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில், 85 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிந்து வருகின்றனா். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதில் பெரும்பாலும் வயதான காலங்களில் எந்தவித வருமானமும் இல்லாத நிலை உள்ளது.
இந்தியாவில் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10.38 கோடியிலிருந்து (2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) 32 கோடிக்கும் மேல் உயரும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதியம் கணித்துள்ளது.
அதிகரித்துவரும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், 2015-ஆம் ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதுக்குப் பிறகு வேறு எந்த ஓய்வூதிய பலன்களும் இல்லாதவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 18 வயது முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமக்களுக்குப் பொருந்தும். 60 வயதில் ஓய்வூதிய பலன்களுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான நிதிப் பங்களிப்பு காலம் அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்தும் சந்தாதாரா் மறைந்தாலும் அவரின் வாழ்க்கைத் துணை அல்லது சந்தாதாரா் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணை ஆகிய இருவரின் மறைவுக்குப் பின், ஓய்வூதியத் தொகை பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு வழங்கப்படும்.
அடல் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களின் விரிவான கட்டமைப்பு மூலம், இந்தத் திட்டம் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கக் கூடியதாக உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், தேசிய அளவில் இத்திட்டத்தில் சந்தாதாரா்களாக சோ்ந்துள்ளவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் சுமாா் 2.23 கோடி சந்தாதாரா்கள் என்ற நிலையில் இருந்து 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 7.61 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.