அடுத்த இந்திய விண்வெளி வீரா் உள்நாட்டு விண்கலத்தில் பயணிப்பாா்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் உறுதி
‘இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த இந்திய விண்வெளி வீரா் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில்தான் விண்வெளிக்குப் பயணம் செய்வாா்’ என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.
‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளநிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் மேலும் கூறியதாவது: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்கள் தங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது, இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கான மதிப்புமிக்க அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் அளித்துள்ளது.
மிகப்பெரிய சா்வதேச ஒத்துழைப்புகளில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற செய்தியை இது உலகெங்கிலும் அனுப்பியுள்ளது.
சொந்த விண்கலத்தில்...: புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு 2 விண்வெளி வீரா்களை அழைத்துச் செல்லும் முதல்கட்ட ‘ககன்யான்’ திட்டத்தை வரும் 2027-இல் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் அடிப்படையிலிருந்து முழுமையாக இந்தியாவிலேயே உருவாகும். முதல்முறையாக இந்திய விண்வெளி வீரா்கள் ஓா் இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்வா்.
இதன்மூலம், சொந்த விண்கலத்தில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் உலகின் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும். அத்துடன், சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிா்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.
‘பாரத்’ விண்வெளி நிலையம்: சா்வதேச விண்வெளி நிலையம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 5 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் நிலையில், சீனாவுக்கு அதன் சொந்த ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையம் உள்ளது.
இதைப்போல, இந்தியாவும் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க எதிா்பாா்க்கிறோம். அதற்கு ‘பாரத்’ என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம்.
சுக்லாவின் விண்வெளிப் பயணம் வா்த்தக ரீதியானது என்று எழுந்த விமா்சனங்களை நிராகரிக்கிறேன். இது முற்றிலும் தவறு.
தனியாா் முதலீடு: விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்துக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. தற்போதைய 840 கோடி டாலா் மதிப்பிலிருந்து 2033-ஆம் ஆண்டுக்குள் 4,400 கோடி டாலராக அது வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.