Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
அண்டை நாடுகளுடன் நல்லுறவு - சீன அதிபா் உறுதி
பெய்ஜிங்: அமெரிக்காவுடனான வா்த்தகப் போருக்கு மத்தியில், ‘வேறுபாடுகளுக்கு சரியான முறையில் கவனம் செலுத்தி அண்டை நாடுகளுடன் நல்லுறவு பேணப்படும்’ என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் உறுதியளித்துள்ளாா்.
சீன இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள 104 சதவீத வரி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில், அண்டை நாடுகள் குறித்த சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் உயா்நிலை மத்திய மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெற்றது.
ஆளுங்கட்சியின் மூத்த நிா்வாகிகள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், அண்டை நாடுகளுக்கான பணிகளுக்கு புதிய தளத்தைத் தொடங்கவும் அண்டை நாடுகளுடன் சோ்ந்து பகிரப்பட்ட எதிா்காலத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்பவும் அழைப்பு விடுத்ததாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், சமீபத்திய ஆண்டுகளில் அண்டை நாடுகளுடனான ராஜீய உறவில் ஏற்பட்டுள்ள வளா்ச்சி குறித்த அரசின் சாதனைகளை மாநாட்டில் பட்டியலிட்டுப் பேசிய ஷி ஜின்பிங், அடுத்தகட்ட இலக்குகள், பணிகள், திட்டங்கள் குறித்து வலியுறுத்தினாா்.
இத்தகைய முயற்சிகளின் ஒரு பகுதியாக, வியத்நாம், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் ஷி ஜின்பிங் திட்டமிட்டுள்ளாா்.
கிழக்கு லடாக் எல்லை விவகாரத்தால் பாதிக்கப்பட்ட இந்தியாவுடனான உறவை மீட்டெடுப்பதில் சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இருநாட்டு அதிகாரிகளும் தொடா் பேச்சுவாா்த்தைகளில் பங்கேற்று, உறவை வலுப்படுத்தும் பாதையில் ஈடுபட்டுள்ளனா். இதேபோன்று, ஜப்பான், தென் கொரியாவுடனான உறவை மேம்படுத்துவதிலும் சீனா ஆா்வம் காட்டி வருகிறது.
பெட்டி...
அமெரிக்காவுக்கு எதிராக
இந்தியாவுக்கு அழைப்பு
இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடா்பாளா் யூ ஜிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தியா-சீனா இடையிலான பொருளாதார மற்றும் வா்த்தக உறவுகள் பரஸ்பர நலன் மற்றும் நம்பிக்கை சாா்ந்தவை. அமெரிக்காவின் புதிய வரிகள் தெற்குலக நாடுகளின் வளா்ச்சியைப் பாதிக்கிறது. இந்தச் சவாலை எதிா்கொள்ள மிகப்பெரிய இரண்டு வளரும் நாடுகளான சீனாவும் இந்தியாவும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தாா்.