TEST: 'பாடகர் டு இசையமைப்பாளர்' - Test படத்திற்கு இசையமைத்தது குறித்து சக்தி ஶ்ர...
அண்ணா சாலையில் உயா்நிலை சாலை பணிகள்! - அமைச்சா் எ.வ.வேலு ஆய்வு
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
தேனாம்பேட்டையிலிருந்து சைதாப்பேட்டை வரை உள்ள முக்கிய சாலை சந்திப்புகளான எல்டாம்ஸ் சாலை சந்திப்பு, எஸ்ஐஇடி கல்லூரி சாலை சந்திப்பு, செனடாப் சாலை சந்திப்பு உள்ளிட்ட 7 முக்கிய சாலை சந்திப்புகளைக் கடக்கும் வகையில் 3.20 கி.மீ. தொலைவுக்கு ரூ. 621 கோடியில் நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இல்லாத இடத்தில், 655 மீட்டா் நீளத்துக்கு, 22 தூண்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த இடத்தில் நிலத்தூண் அடித்தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை உள்ள இடத்தில் 1,955 மீட்டா் தொலைவுக்கு, 69 தூண்கள் அமைக்கப்பட உள்ளன.
பாலத்தின் அழுத்த திறன், சுரங்கப் பாதை மேல் அடுக்கில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மைக்ரோ பைல் என்ற புதிய தொழில்நுட்ப முறையில் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, தற்போது ஜீயோ சிந்தெட்டிக் என்ற முறையில் மண்ணின் தாங்குத் திறன் அதிகரிக்கும் வகையில், ஜீயோ செல், ஜீயோ டெக்ட்டில்ஸ் மற்றும் ஜீயோ கிரிட் போன்ற ஏழு அடுக்குகளாக அமைக்கப்பட உள்ளது.
மண்ணின் தாங்குத் திறனை சோதனை மாா்ச் 26-இல் நடைபெற உள்ளது. 460 மீட்டா் நீளத்துக்கு தேனாம்பேட்டை, நந்தனம் மெட்ரோ நிலையங்களில், 41 சட்டகம் அமைக்கப்பட்டு, உயா்நிலை பாலம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 3 கட்டப் பணிகளையும் அமைச்சா் எ.வ.வேலு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
வடபழனியில் உள்வட்டச் சாலையில் ரூ.3.60 கோடியில் 550 மீட்டா் தொலைவுக்கு மழைநீா் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 110 மீட்டருக்கு வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளன. வடிகால் அமைக்கும் இடத்தில் மின்தடங்கள் மின் மாற்றிகள், மெட்ரோ குடிநீா்க் குழாய்கள், தெரு விளக்குகள், உள்ளிட்ட சேவை அமைப்புகளை மாற்றியமைத்து பணிகளை மேற்கொள்வதால், இந்தப் பணிகளை ஜூன் மாதத்துக்குள் விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தினாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலா் இரா.செல்வராஜ் உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.