Shruti Haasan: "மக்கள் அப்படி நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல!" - ரஜினி குற...
'அதிகார மையம் சபரீசனா, மகனா, கனிமொழியா? ; தென்மாநிலங்களில் இந்தி..!' - அமித் ஷா பேட்டி
'அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்' என்று எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி கொடுத்ததற்கு பின்னணி அமித் ஷாவின் ஒரு பேட்டி தான்.
மத்திய உள்துறை அமைச்சரி அமித் ஷா 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அவர் அதில் தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியுள்ளதாவது...
``கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படும் மொழி குறித்து ஏன் இன்னும் சண்டையிட்டு கொண்டிருக்கிறீர்கள்?”
``நாங்கள் இதற்காக இதுவரை சண்டையிட்டதில்லை. இந்தியா இந்திய மொழிகளில் நடக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்.
அந்நிய மொழிகளில் இந்தியா நடக்க வேண்டும் என்பவர்கள் தான் சண்டையிடுகிறார்கள்.
சீனா, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து சொந்த மொழிகளைப் பின்பற்றுவதைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் அனைத்து இந்திய மொழிகளையும் மதிக்கிறோம். நாங்கள் தென் மாநிலங்களில் தென் மாநில மொழியில் நிர்வாகம் நடக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
இரு மாநிலங்கள் தெலுங்கை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழும், கேரளாவில் மலையாளமும், கர்நாடகாவில் கன்னடமும் பின்பற்றப்பட வேண்டும்.
இந்தியை பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லை.”
``தமிழ்நாட்டில் அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். அங்கே மொழி பிரச்னை எப்படி இருக்கிறது?”
``இந்திய மொழிகள் என்று கூறும்போது, அதில் தமிழும் உள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங்கை நீங்கள் ஏன் தமிழில் கற்பிக்கக் கூடாது என்று நான் ஸ்டாலினிடம் கேட்க வேண்டும்.
இதற்கு எதிராக தமிழ்நாடு இருந்தால், அப்போது எனக்கும் பிரச்னை இருக்கும்.”
``அதிமுக - பாஜக கூட்டணி குறித்து...?”
``நாங்கள் அமோக வெற்றி பெறுவோம்.”
``கடந்த கேள்விக்கான உங்களது பதில், பிளான் மற்றும் உத்திகளைப் பொறுத்ததா அல்லது கள நிலவரத்தின் அடிப்படையிலானதா?”
``நான் மக்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறேன். தமிழக மக்கள் ஊழல், சட்டம் ஒழுங்கு பாதிப்பு, உறவினர்களுக்குச் சலுகை அளித்தல் மற்றும் குடும்ப சண்டைகள் ஆகியவற்றால் சலித்துப் போயுள்ளனர்.”

`உங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், ஆட்சியில் பங்கு கொள்வீர்களா?’
`ஆம்.’
``தவெக, பாமக உங்கள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா?
``இப்போதைக்கு இதை சொல்ல முடியாது. அனைத்து கட்சிகளையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியை செய்வோம்.”
``தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னை என்ன?”
``திமுக ஆட்சியில் ஊழல் ஆயிரம் கோடிகள் கணக்கில் மலிந்து கிடக்கின்றன.
ரூ.39,775 கோடி மதிப்புள்ள மதுபான ஊழலில் FL2 உரிமங்களில் முறைகேடுகள், பார் டெண்டர்கள், அதிக கட்டணம் வசூலித்தல், சட்டவிரோத விற்பனை மற்றும் பாட்டில் கொள்முதல் மோசடி ஆகியவை அடங்கும்.
ரூ.5,800 கோடி மணல் சுரங்க ஊழல்: அனுமதிக்கப்பட்ட 4.9 ஹெக்டேருக்குப் பதிலாக 105 ஹெக்டேர் சுரண்டப்பட்டது. இது 30 மடங்கு அதிகம் ஆகும்.
எரிசக்தி ஊழலில், திமுக வழங்கிய ஒப்பந்தங்கள் மூலம் ரூ.4,400 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது.
எல்காட் ஊழலில் ரூ. 3,000 கோடி பொது நிறுவன பங்குகள் ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
போலி டேப் பொருத்துதல் சான்றிதழ்களில் ரூ.2,000 கோடி போக்குவரத்துத் துறை ஊழல்.
போலி லெட்டர்ஹெட்கள், நிறுவனங்கள், முகவரிகள் வழங்கப்பட்ட ரூ.600 கோடி டிஎன்எம்எஸ்சி ஊழல்.
ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக, உண்மையான விலையை விட 4–5 மடங்கு அதிக விலையில் பெண்களுக்கான ஊட்டச்சத்து கருவிகளை வாங்கிய ரூ.450 கோடி ஊழல்.

பொங்கல் பண்டிகையின் போது, இலவச வேட்டி முறைகேடுகள் ரூ.60 கோடி மதிப்பில் நடந்தன.
வேலை வாங்கி தருவதாக கூறி, தனிநபர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டுள்ளது.
MGNREGA ஊழலில், ஒரு பயனாளி வீதம் ரூ.41,503 கையாடல் செய்யப்பட்டுள்ளது.
பின்னர், திமுகவில் கோஷ்டிகள் உள்ளன. தமிழ்நாட்டு அரசின் அதிகார மையம் தலைமை செயலகத்திற்கு வெளியே உள்ளது. சபரீசனா, மகனா, கனிமொழியா, இல்லை... வேறு யாராவதா - யாரை பின்பற்றுவது என்று திமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. அதனால் தான் திமுக ஒன்றுமில்லாத பிரச்னைகளை உருவாக்க முயற்சி செய்து வருகிறது.”
``தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நிதி பகிர்வு பிரச்னை குறித்து...?”
``இந்தியா கூட்டணி, நிதிகளை சரியாக கையாளாததை மறைக்க பொய் தகவல்களைப் பரப்பி வருகிறது.
மோடி அரசு சமமான வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது. உண்மையில், தென்னிந்தியாவிற்கான நிதி பகிர்வு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மோடி அரசாங்கத்தில், ஐந்து தென் மாநிலங்களும் வரி பகிர்வில் ரூ.10.96 லட்சம் கோடி பெற்றுள்ளனர். முன்பு, இது ரூ.3.55 லட்சம் கோடி ஆகும். 209 சதவிகித அதிகமாகும்.
ரூ.2.18 லட்சம் கோடியில் இருந்து ரூ.9.38 லட்சம் கோடியாக 330 சதவிகிதம் மானிய உதவி உயர்த்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மட்டும் வரி பகிர்வில் 207 சதவிகித உயர்வை பெற்றுள்ளது. இது ரூ.94,977 கோடியில் இருந்து ரூ.2.92 லட்சம் உயர்வாகும்.
மானியங்கள் ரூ.57,924 கோடியில் இருந்து ரூ.2.55 லட்சம் கோடி உயர்த்தப்பட்டுள்ளது. இது 342 சதவிகித உயர்வாகும்.”

``தொகுதி மறு வரையறை குறித்து மக்கள் உண்மையில் பயப்படுகிறார்களே?”
``தென் மாநிலங்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று முன்னரே கூறிவிட்டேன். எந்த பாராபட்சமும் இருக்காது.
தொகுதி மறுவரையறை கமிஷன் இன்னமும் அமைக்கப்படவில்லை.
பின்னர் எதற்காக இது குறித்து பேசுகிறார்கள்.
தமிழ்நாட்டில் தேர்தல் வருகிறது அவ்வளவு தான். இது அரசியல்.
சட்டமாக வருவதற்கு முன், நாடாளுமன்றத்தில் நிச்சயம் விவாதிக்கப்படும்.”