அமெரிக்காவில் மாயமான இந்திய பெண்; ஆங்கிலம் தெரியாது, திருமணத்துக்காக சென்ற இடத்தில் பரிதாபம்
இந்தியாவைச் சேர்ந்த 24 வயது பெண் அமெரிக்காவில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காக அமெரிக்கா வந்ததாகக் கூறப்படும் இவர், சில நாள்களிலேயே மாயமாகியிருக்கிறார். அவரைத் தேடும் பணியில் அமெரிக்க அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கடைசியாக அந்த பெண் ஜூன் 25-ம் தேதி, நியூ ஜெர்சியில் உள்ள லிண்டந்வோல்ட் என்ற இடத்தில் தென்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த உள்ளூர் போலீஸ்காரர்கள், அந்த பெண்ணின் பெயர் சிம்ரன் என்றும் கடந்த புதன் கிழமை, காணாமல் போவதற்கு முன்பு யாருக்காகவோ காத்திருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர் என்கிறது நியு யார்க் போஸ்ட் தளம்.

சிசிடிவி காட்சிகளின்படி, சிம்ரன் பதட்டமாகவோ அல்லது ஏதேனும் துன்பத்தை எதிர்நோக்கி கவலையாகவோ இல்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
யார் இந்த சிம்ரன்?
ஜூன் 20 தேதி அமெரிக்கா சென்றடைந்த சிம்ரன், நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்காக வந்திருக்கிறார் எனக் கூறப்பட்டது. தற்போது அவர் ஊர் சுற்றிப் பார்ப்பதற்காகக் கூட வந்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சிம்ரன் வைத்திருந்த சர்வதேச ஃபோன் வைஃபை மூலம் மட்டுமே இயங்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிம்ரனுக்கு ஆங்கிலம் தெரியாது என்றும், அவருக்கு அமெரிக்காவில் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் கண்டறிந்துள்ளனர். அவர் 5 அடி 4 அங்குலம் உயரத்தில் சுமார் 68 கிலோ எடை கொண்டவராக இருப்பார் என்றும் அவர் நெற்றியில் சிறிய தழும்பு இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காணாமல் போன அன்று, சாம்பல் நிற ஸ்வெட்பேண்ட், ஒரு வெள்ளை டி-சர்ட், கருப்பு ஃபிளிப்-ஃப்ளாப்ஸ் மற்றும் சிறிய வைர காதணிகள் அணிந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
அமெரிக்க காவல்துறையினர் இந்தியாவில் இருக்கும் சிம்ரனின் உறவினர்களை தொடர்புகொள்ள முயற்சித்து வருகின்றனர். இதுவரை யாரையும் கண்டறியவில்லை என்பதால் சிம்ரன் யார் என்ற கேள்விக்கு முழுமையான விடை இல்லாமலே இருக்கிறது.
தடயங்கள், தொடர்புகள் குறைவாக இருப்பதனால் சிம்ரனின் வழக்கில் மர்மம் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இதுகுறித்து இந்தியா தரப்பில் எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லை.
கடந்த மார்ச் 6-ம் தேதி இதேப்போல சுதிக்ஷா கோணங்கி என்ற மருத்துவ மாணவி அமெரிக்காவில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. சுதிக்ஷா கடைசியாக கடற்கரைக்கு விடுமுறையை கழிக்க சென்றுள்ளார். அவரது பெற்றோர் அவர் கடலில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுகின்றனர். அவரது நண்பர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.