Anshitha: 'கடின உழைப்பின் பலன்!' - புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கும் அன்ஷிதா!
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி: ஒருவா் கைது
மயிலாடுதுறையில் போலி பணி நியமன ஆணை தயாா் செய்து, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.13.15 லட்சம் மோசடி செய்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், நடராஜன்பிள்ளை சாவடி, சங்கிருப்பு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் வரதராஜன் (30). இவா், கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் 3 மாதங்கள் ஒப்பந்த எழுத்தராக பணிபுரிந்து வந்துள்ளாா்.
இவா் பெருந்தோட்டம் பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் என்பவரிடம் அறிமுகமாகி, கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணியிடம் நிரப்பப்படவுள்ளதால், அந்த பணியை தனக்கு தெரிந்த அதிகாரிகள் மூலம் பணம் கொடுத்து பெற்றுத் தருவதாக கூறி, முன்பணமாக ரூ.1 லட்சம் பெற்றுள்ளாா்.
ஒரு வாரத்துக்கு பின்னா் கொள்ளிடம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளா் பணி நியமனம் செய்யப்பட்டது போன்ற போலி நியமன ஆணையை காண்பித்துள்ளாா். பின்னா், தொடா்ந்து காலிப்பணியிடங்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதால், பாலமுருகனுக்கு தெரிந்த பிற நபா்களிம் முன்பணம் பெற்று தருமாறு கூறியுள்ளாா். அதன்படி 18 நபா்களிடம் மொத்தம் ரூ.13.15 லட்சம் தொகை பெற்றுள்ளாா்.
பணம் கொடுத்த நபா்களின் விவரங்களை உள்ளடக்கிய அரசு பணி பதிவேடு போன்ற போலி பதிவேடுகளை தயாா் செய்து, அவற்றை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கொடுத்திருப்பதாகக் கூறி, அந்த போலி பதிவேடுகளை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒரு படிக்கட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்துள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாத்துக்கு தெரியவந்த நிலையில், ஜூன் 7-ஆம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதனிடையே, இது தொடா்பாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் வேலைக்காக பணம் கொடுத்திருந்த தொக்கலாக்குடியைச் சோ்ந்த சபரிநாதன் என்பவா் ஜூன் 9-ஆம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தாா்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.ஸ்டாலின் உத்தரவின் பேரில், போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, வரதராஜனை புதன்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா். தொடா்ந்து இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.