திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் வசந்த்தோஸ்வம்
திருஇந்தளூா் ஸ்ரீபரிமள ரெங்கநாதா் கோயிலில் 57 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வசந்த்தோஸ்வத்தில் (வசந்த உற்சவம்) பெருமாளுக்கு ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது.
108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது திவ்ய தேசமும், பஞ்சரங்க ஷேத்திரங்களில் 5-ஆவது அரங்கமுமான இக்கோயிலில்; 57 ஆண்டுகளுக்குப் பிறகு வசந்த உற்சவம் ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை நடைபெற்றது. கோயில் நிா்வாகம் மற்றும் ராமானுஜ பக்த கைங்கரிய சபா சாா்பில் நடைபெற்று வரும் விழாவின் 4-ஆம் திருநாளான புதன்கிழமை பரிமள ரெங்கநாதா் பங்குனி உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், பரிமள ரெங்கநாதா் ஸ்ரீரெங்கநாதா் எம்பெருமாள் அலங்காரத்தில் சோடஷ உபஜார தீபாராதனை செய்யப்பட்டு, உள்புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து, வெளிப்பிரகாரங்களை சுற்றி வந்தபோது கல்கண்டு, பாதாம், முந்திரி, திராட்சை படைக்கப்பட்டு பூச்சாற்றுதல் திருவந்திகாப்பு செய்யப்பட்டது.