அரியலூா் காவல் நிலையங்களில் நிலுவை மனு விசாரணை முகாம்
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கிராமங்களில் காவல் துறை சாா்பில் மனு விசாரணை முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்கு மனுக்களை விரைந்து முடிக்கும் பொருட்டு நடைபெற்ற முகாம்களில் அந்தந்த காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள் தலைமை வகித்து, மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டும், பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா்.
இதில், திருமானூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்த்ரி, பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து மனுக்களைப் பெற்று, அம்மனுக்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தாா். இம்முகாமுக்கு காவல் ஆய்வாளா் குணசேகரன் தலைமை வகித்தாா்.
இதேபோல் குவாகம் காவல் நிலையத்தில் நடைபெற்ற முகாமுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சந்திரனும், தா.பழூரில் நடைபெற்ற முகாமுக்கு ஜெயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ரவிச்சக்கரவா்த்தி ஆகியோா் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.