அலுவலகப் பொருள்களை மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றுவிட்டார்: பாஜக எம்எல்ஏ
சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் இருந்த அரசுப் பொருள்களை முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தூக்கிச் சென்றதாக பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகி தெரிவித்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 48 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி 12 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியடைந்தது.
ஆம் ஆத்மியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் இந்த தேர்தலில் தோல்விடைந்தனர்.
இதையும் படிக்க : ‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!
ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்களின் அலுவலகங்களை காலி செய்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு அளிக்கும் பணியை பொதுப்பணித்துறை செய்து வருகின்றது.
இந்த நிலையில், தில்லி பட்பர்கஞ்ச் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 12 ஆண்டுகளாக பதவி வகித்த மணீஷ் சிசோடியாவின் அலுவலகம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ ரவீந்தர் சிங் நேகிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தில் இருந்த 250 நாற்காலிகள், டிவி, ஒலிப்பெருக்கிகள், சோபா, மேஜைகள், ஏசிக்களை காணவில்லை என்று ரவீந்தர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
பொதுப்பணித்துறை அளித்த அலுவலகத்தை 12 ஆண்டுகளாக மணிஷ் சிசோடியா பயன்படுத்தி வந்தார். பல்வேறு பொருள்கள் இந்த அலுவலகத்துக்காக அரசு வழங்கியது. ஆனால், மின்விசிறி உள்பட அனைத்தையும் மணிஷ் சிசோடியா எடுத்துச் சென்றுவிட்டார்.
அனைத்தும் அரசின் சொத்துகள். அரசுப் பொருள்கள் அனைத்தும் விட்டுச் செல்ல வேண்டியது கடமை. இந்த அரசு அலுவலகத்தை தேர்தல் பணிக்காக உபயோகித்தார்கள். தேர்தல் தொடர்புடைய கூட்டங்களை இங்கே நடத்தினார்கள். இதுதொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் அரசியலமைப்பை ஒருபோதும் பின்பற்றியதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.