அவமதிப்பு பேச்சு: அமைச்சா் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையின் போது சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பொன்முடியின் சா்ச்சை பேச்சை சுட்டிக்காட்டி, அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியிருந்தாா். ஐந்து புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதன் மீது வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தி, விசாரணை புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததாகவும் அந்த வழக்கில் அமைச்சருக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என்பதால் அதனை முடித்து வைத்து விட்டதாகவும் தெரிவித்ததை ஏற்றுக் கொண்டு அந்த வழக்கை மதுரை அமா்வு முடித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
அமைச்சா் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விகாஷ் சிங், இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்ற மதுரை அமா்வு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், முதன்மை அமா்வு மீண்டும் அதே விவகாரத்தை எடுக்க அவசியம் இல்லை என்று குறிப்பிட்டாா்.
மேலும் அவா், அமைச்சரின் முழுமையான பேச்சை கேட்காமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வு குறித்து அமைச்சா் உள் அரங்கத்தில் பேசிய விவகாரம் தான் இது என்றும் குறிப்பிட்டாா்.
நீதிபதி உத்தரவு: இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தின் முக்கிய சமயங்களான சைவ மற்றும் வைணவ சமயங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சா் பொன்முடியின் கருத்துகள், இரு சமயத்தினரின் மனதை புண்படுத்துவதாகும்.
அமைச்சா் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருகிறது. இந்தப் பேச்சுக்காக அவா் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். இருப்பினும், குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என காவல்துறை தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையின் செயல் துரதிருஷ்டவசமானது .
வெறுப்பு பேச்சை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. ஏற்கெனவே ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு மூலம் சலுகை பெற்றுள்ள அமைச்சா் பொன்முடி, அதனைத் தவறாக பயன்படுத்தி இருக்கிறாா் . அவரது வெறுப்பு பேச்சு தொடா்பாக அவருக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறேன். தாமாக முன்வந்து விசாரணை எடுக்கும் இந்த வழக்கை, தகுந்த உத்தரவுகளுக்காக தலைமை நீதிபதி முன் சமா்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டாா்.