ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஜோத்பூரைச் சேர்ந்த மத போதகர் ஆசாராம் பாபு (83). இவர் தனது ஆசிரமத்தில் ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2013 ஆம் ஆண்டு இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆசாராம் பாபுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆசாராம் பாபுவுக்கு கடந்த 2018-ல் முதல்முறையாக 7 நாள்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு, 5 நாள்கள் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதேபோல, கடந்த டிசம்பா் 10, 2024-ல் 17 நாள்கள் ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஆசாராம் பாபுவின் உடல்நிலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மாா்ச் 31 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அவரது இடைக்கால ஜாமீன் மேலும் நீட்டிக்கப்படுவதாக இன்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவர்கள் வெளியே செல்கையில் போலீஸ் பாதுகாப்புடன் செல்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் வீட்டைச் சுற்றி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பேசுகையில், ”ஆசாராம் பாபுவுக்கு தொடர்ந்து இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. சிறையில் இருந்தே நான்கு சாட்சிகள் கொல்லப்பட அவர் காரணமாக இருந்தார். உடல்நிலையைக் காரணம் காட்டி வெளியே வந்த அவர் தொடர்ந்து பக்தர்களை சந்திக்க வெவ்வேறு ஊர்களுக்குச் செல்கிறார்.
ஆசாராம் பாபுவுக்கு நீதிமன்றம் தொடா்ந்து கருணை காட்டுகிறது. அவர் சிறைக்குத் திரும்பமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறினார்கள். இப்போது அது உண்மையாகி வருகிறது’” என தெரிவித்தாா்.